Published : 12 Aug 2024 09:46 AM
Last Updated : 12 Aug 2024 09:46 AM

முத்து நகர் ரயிலில் பொதுப் பெட்டி எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி- சென்னை இடையே இயக்கப்படும் முத்துநகர் விரைவுரயிலில் வரும் 20-ம் தேதி முதல் மீண்டும் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கப்படுகிறது.

தூத்துக்குடி- சென்னை இடையே முத்துநகர் விரைவு ரயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது.

நாள்தோறும் நெரிசல்: 21 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஏற்கெனவே 4 பொதுப் பெட்டிகள் இருந்தன. ஆனால், இடையில் 3 பெட்டிகளாக குறைக்கப்பட்டு, 3-ம் வகுப்புகுளிர்சாதன வசதி பெட்டி எண்ணிக்கை 4-ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் பொதுப் பெட்டிகளில் பயணிகள் அமர்ந்து கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் காணப்படுவதால், பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து முத்துநகர் விரைவு ரயிலில் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகம் மீண்டும் 4-ஆக அதிகரித்துள்ளது. மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டிகளில் ஒன்று குறைக்கப்பட்டு, முன்பதிவு இல்லாத ஒரு பொதுப் பெட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி- சென்னை முத்துநகர் ரயிலில் இந்த மாற்றம் வரும் 20-ம் தேதியில் இருந்தும், சென்னை- தூத்துக்குடி முத்துநகர் ரயிலில் வரும் 21-ம் தேதியில் இருந்தும் நடைமுறைக்குவரும்.

பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை அதிரிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தெற்கு ரயில்வேயின் இந்த முடிவுக்கு பல்வேறு ரயில் பயணிகள் நலச்சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x