Last Updated : 08 Aug, 2024 09:30 PM

 

Published : 08 Aug 2024 09:30 PM
Last Updated : 08 Aug 2024 09:30 PM

மீண்டும் மீண்டும்... தமிழக மீனவர்கள் 33 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனைச் சேர்ந்த 4 நாட்டுப்படகுகள் மற்றும் அதிலிருந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான 4 நாட்டுப்படகுகளில் 33 மீனவர்கள், கடந்த 6-ம் தேதி பாம்பன் வடக்கு துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். இன்று (ஆக.8) மாலை இலங்கை மன்னார் தென்கடல் பகுதியில் மீன்பிடித்த இந்த 4 நாட்டுப் படகுகளையும், அதிலிருந்த சகோதரர்களான ஜோன்சன், இன்னாசி மற்றும் கிரீன்சன், ஆரோக்கியம், சேந்திடிக்கல் உள்ளிட்ட 33 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

படகுகளையும், மீனவர்களையும் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்படை தளத்துக்கு இலங்கை கடற்படை அழைத்துச் செல்வதாக பாம்பன் மீனவ சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இன்று பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 7 பேர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 6 பேர் என தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில் இன்று மாலை 33 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது ராமேசுவரம் மற்றும் பாம்பன் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீன்பிடி தடை காலத்துக்கு பின் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 109 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதில் 52 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர், 12 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 45 மீனவர்கள் இலங்கை நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளனர். இந்நிலையில், இன்று 33 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x