Last Updated : 08 Aug, 2024 07:45 PM

 

Published : 08 Aug 2024 07:45 PM
Last Updated : 08 Aug 2024 07:45 PM

தமிழக மீனவர்கள் 13 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

ராமநாதபுரம்: இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் இரண்டு விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகை நாட்டுடமை ஆக்கியும், படகு ஓட்டுநர்கள் 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்தும் இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூலை 1-ம் தேதி 4 நாட்டுப்படகுகளில் இருந்து 25 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை கடற்பகுதிக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்தாக 4 நாட்டு படகுகளையும், 25 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து, சிறையில் அடைத்தது. இதனையடுத்து ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டடங்களை நடத்தினர். இந்நிலையில் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் கடந்த வாரம் 3 படகுளை நாட்டுடமையாக்கி, படகு ஓட்டுநர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. அந்த படகுகளில் சென்ற 15 மீனவர்களை விடுதலை செய்தது.

ஒரு படகு பதிவு செய்யப்படாததால் அந்த படகிலிருந்த 7 மீனவர்களும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டனர். இந்த 7 மீனவர்களின் வழக்கு இன்று (ஆக.8) ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், மீனவர்கள் ஸ்டீபன்(52), அந்தோணி(49) உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தும், அந்த படகை நாட்டுடைமையாக்கியும் உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 7 மீனவர்களும் இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை மீனவர்கள் 6 பேர் விடுதலை: புதுக்கோட்டை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று, கடந்த ஜூலை 11-ம் தேதி எல்லை தாண்டிய வழக்கில் சிறைபிடிக்கப்பட்ட 2 விசைப்படையும் அதிலிருந்து 9 மீனவர்களின் வழக்கு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம், ஒரு படகில் இருந்த 4 மீனவர்களில் இரண்டு மீனவர்களை விடுதலை செய்ததுடன், அந்த படகின் உரிமையாளர் இருந்ததால் உரிமையாளருக்கும், படகு ஓட்டுநருக்கும் தலா ரூ.40 லட்சம் (இலங்கை பணம்) அபராதமும், கட்ட தவறும் பட்சத்தில் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.

இரண்டாவது படகில் இருந்த 5 மீனவர்களில் படகு ஓட்டுநரும் உரிமையாளரும் ஒருவர் என்பதால் அவருக்கு ரூ.80 லட்சம் அபராதமும், கட்ட தவறும் பட்சத்தில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும், அந்த படகில் இருந்த எஞ்சிய 4 மீனவர்களை விடுதலை செய்தும் உத்தரவிடப்பட்டது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதராக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 மீனவர்கள் இலங்கை வெளிகடை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று கடந்த 4-ம் தேதி அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 4 மீனவர்களை இன்று 2-வது முறையாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் மீனவர்கள் 4 பேருக்கும் நீதிமன்ற காவலை வரும் 22-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து 4 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x