Last Updated : 08 Aug, 2024 06:42 PM

1  

Published : 08 Aug 2024 06:42 PM
Last Updated : 08 Aug 2024 06:42 PM

“என்னைக் கண்டு திமுக அரசு, உதயநிதிக்கு அச்சம்!” - சவுக்கு சங்கர் ஆவேசம்

யூடியூபர் சவுக்கு சங்கரை குமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர் 

நாகர்கோவில்: “திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் என்னைக் கண்டு அஞ்சுகின்றனர். அதனால் மீண்டும் புதிய வழக்குகளில் என்னை சிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது” என குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கூறினார்.

தமிழக காவல் துறையின் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின. அதன்படி, களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்புலட்சுமி மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டம் உட்பட பல பிரிவுகளில் சவுக்கு சங்கர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு குமரி மாவட்டம் குழித்துறை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை காலையில் சவுக்கு சங்கர் குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோசஸ் ஜெபசிங் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் ஜாமீன் வழங்கபட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதையடுத்து இவ்வழக்கில் அவருக்கு நீதிபதி மோசஸ் ஜெபசிங் நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

இதையடுத்து சவுக்கு சங்கரை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களை நோக்கி, “அடுத்தடுத்த வழக்குகளில் என்னை மீண்டும் மீண்டும் கைது செய்ய முயற்சி நடக்கிறது. திமுக அரசு என்னைப் பார்த்து அஞ்சுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்னைக் கண்டு அஞ்சுகிறார். இதன் காரணமாகத்தான் என் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x