Published : 06 Aug 2024 07:48 PM
Last Updated : 06 Aug 2024 07:48 PM

இலங்கைக்கு பிடித்துச் செல்லப்பட்ட 22 மீனவர்கள் நிலை என்ன? - சோகத்தில் மூழ்கிய தருவைகுளம் கிராமம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர்கள் 22 பேரையும், அவர்களது படகுகளையும் மீட்கக் கோரி மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவில்பட்டி: இலங்கைக்கு பிடித்துச் செல்லப்பட்ட தருவைகுளத்தைச் சேர்ந்த 22 மீனவர்களின் நிலை என்ன என்று தெரியாததால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன் இறங்கு துறையில் இருந்து இயக்கப்படும் விசைப் படகுகள், பல நாள் ஆழ்கடல் தங்கி மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த ஆர்.அந்தோனி மகாராஜா (45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் உ.ரமேஷ் (36), ம.ஸ்டீபன் (47), ஜெ.அருண் (19), அ.அந்தோனி தாதிஸ் (20), அ.ஜார்ஜ் ராமு (20), சிப்பிகுளம் கல்லூரணியைச் சேர்ந்த ஆ.சுப்பிரமணியம் (63), சோலைமுத்து (41), ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த இ.எத்தையாகுமார் (30), நரிப்பூரைச் சேர்ந்த து.மாரியப்பன் (52), பெரியபட்டணத்தைச் சேர்நத் மு.சுரேஷ் (39), பாறைக்குளத்தைச் சேர்ந்த முருகராஜ் (20) ஆகிய 12 மீனவர்கள் கடந்த மாதம் 21-ம் தேதி தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க சென்றனர்.

அதேபோல் ஜெ.அந்தோணி தென் டேனிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தருவைகுளத்தைச் சேர்நத் சே.மிக்கேல் ஆல்வின்(20), மா.டேனியல் சஞ்ஜெய்(25), சில்வர் ஸ்டார்(20), அ.மிக்கேல் டேனியல்ராஜா(25), தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த க.மாரி ஆனந்தன்(45), கீழ வைப்பாறைச் சேர்ந்த சூ.இன்னாசி(47), கீழ அரசரடியைச் சேர்ந்த அ.அழகுராஜா(28), வேம்பாரைச் சேர்ந்த அ.ஆரோக்கியனார்பட் (19), ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த இ.ராசீன்(45), இ.விஜயகுமார்(43) ஆகிய 10 மீனவர்கள் கடந்த மாதம் 23-ம் தேதி தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடல் தங்கி மீன்பிடிக்க சென்றனர்.

இந்த 2 விசைப்படகுகளும் நேற்று பிற்பகல் இலங்கைக்கு நடுநிலை எல்லை வழியாக சர்வதேச கடற்பகுதி பகுதியில் சென்றபோது சீரற்ற வானிலை, கடல் நீரோட்டங்கள் காரணமாக இலங்கை கடற்பகுதியில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளுடன் 22 மீனவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் குறித்த எந்த தகவலும் இந்திய கடற்படையிடம் அல்லது கடலோர காவல்படையிடமும் தெரிவிக்காததால் தருவைகுளம், ராமநாதபுரம், தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் நிலை என்னவென்று தெரியாததால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

இந்நிலையில், இன்று காலை தருவைகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் ஊர் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி சென்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு வழங்கினர்.

தருவைகுளத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் எஸ்.அந்தோணி லாரன்ஸ் கூறியது: “விசைப்படகுகளில் இருந்து கடலில் வீசப்படும் வலை 13 கி.மீ. தூரம் வரை செல்லும். அது கடலின் நீரோட்டம், காற்று வீசும் திசையில் விசைப்படகை சேர்த்து இழுத்துச் செல்லும். அப்படி 30 கி.மீ. வரை இழுத்துச் செல்லும் தன்மை கொண்டது. இதனால் அவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது. அந்த வலையை மீண்டும் விசைப்படகுக்கு இழக்க 4 மணி நேரமாகும். அதுவும் காற்று அதிகம் வீசினால் 7 மணி நேரம் வரை எடுக்கும். இந்த வலையை பருவலை அல்லது செவுல்வலை என்று கூறுவார்கள். இது கடலுக்கு மேல் தான் மிதக்கும். இதற்கு அரசு மானியம் வழங்குகிறது.

இந்த வலையால் பாதிப்பு கிடையாது.அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் முதலில் இரா.அந்தோனி மகாராஜா விசைப்படகை பிடித்து விசாரித்து, அவர்களிடம் புகைப்பட அடையாள அட்டைகளை கேட்டுள்ளனர். உங்களிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என அழைத்துள்ளனர். அப்போது அதனருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெ.அந்தோணி தென் டேனிலா விசைப்படகை பிடித்து, இதே காரணத்தை கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்கள் இலங்கை கல்லுப்பட்டி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இங்குள்ள மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்ற தொடர்பாக இரவு 10 மணி வரை எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அதன் பின்னரே தகவல் கிடைத்துள்ளது. அதுவும் கடற்படை மூலமாக தெரிவிக்கப்படவில்லை. இப்போது வரை அவர்கள் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது. இதனால் மீனவர்களின் நிலை குறித்து கவலையாக உள்ளது. உடனடியாக மத்திய, மாநில துரிதமாக நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x