Published : 06 Aug 2024 05:32 PM
Last Updated : 06 Aug 2024 05:32 PM

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை: 3 படகு ஓட்டுநர்களுக்கு இலங்கை மதிப்பில் ரூ.1.2 கோடி அபராதம்

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் 3 படகு ஓட்டுநர்களுக்கு இலங்கை மதிப்பில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜூன் 22 அன்று கடலுக்குச் சென்ற ஜஸ்டின், ரெய்மென்ட், ஹெரின் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று விசைப் படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகுகளிலிருந்த 22 மீனவர்களை கைது செய்தனர். 22 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் இன்று (ஆக.6) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன் 3 விசைப்படகு ஓட்டுநர்களான காளீஸ்வரன், கருப்பையா, ஜெகன் ஆகிய மூவருக்கும் இலங்கை மதிப்பில் தலா 40 லட்சம் வீதம் 1 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்தும் (இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சத்து 50 ஆயிரம்), அபராதத்தை செலுத்தத் தவறினால் தலா ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள 19 மீனவர்களும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜூலை 23 அன்று சிறைப்பிடிக்கப்பட்ட 9 ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களுக்கு ஆகஸ்ட் 20 வரையிலும் நீதிமன்ற காவலை நீட்டித்து ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x