Last Updated : 06 Aug, 2024 04:12 PM

 

Published : 06 Aug 2024 04:12 PM
Last Updated : 06 Aug 2024 04:12 PM

ராமநாதபுரத்தில் 14 கி.மீ நடைப்பயிற்சியுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடப்பணியை ஆய்வு செய்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

ராமநாதபுரம்: நடைப்பயிற்சிக்கு நடுவே பரமக்குடியில் இருந்து 14 கி.மீ தூரம் நடந்தே சென்று சத்திரக்குடி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவப் பணியாளர்களுக்கு தேநீர் விருந்தளித்தார். இந்த விசிட்டின்போது, பரமக்குடி அரசு மருத்துவமனைக்கான புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தாமதமாக நடைபெறுவதாகக் கூறி பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் மருத்துவத் துறை இணை இயக்குநர் ஆகியோரை அமைச்சர் கடிந்து கொண்டார்.

மருத்துவத் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.7.15 கோடியில் கட்டப்பட்ட பல்வேறு மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை கட்டிடங்களை திறந்து வைப்பதற்காக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்றிரவு பரமக்குடி வந்தார். அரசு ஐடிஐ பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அமைச்சர், இன்று அதிகாலை அங்கிருந்து நடைப்பயிற்சியை தொடங்கினார். அவருடன் பரமக்குடி எம்எல்ஏ-வான முருகேசனும் உடனிருந்தார்.

பொட்டிதட்டி, காக்கனேந்தல், காமன்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக அமைச்சர் நடைப்பயிற்சி மேற்கொண்டு, சத்திரக்குடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வந்து அங்கே ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மகப்பேறு இறப்பு எல்லை என்ற சாதனைக்காக, அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு அமைச்சர் தேநீர் விருந்து அளித்து பாராட்டினார். மேலும், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் குறித்து கேட்டறிந்ததுடன், பயனாளிகளின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.

அதனையடுத்து பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.47 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டிடப் பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதாகக் கூறி, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அமைச்சர் பேசினார்.

சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக மகப்பேறு இறப்பு இல்லை என்ற சாதனைக்காக அங்கு பணிபுரியும் மருத்துவத்துறையினரை பாராட்டி தேனீர் விருந்து அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன். அருகில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன்.

அப்போது, “இக்கட்டிடப்பணி தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் தரைத்தளம் கூட கட்டுமுடிக்கவில்லை. இந்த ஒப்பந்ததாரரை மாற்றிவிட்டு வேறொரு ஒப்பந்ததாரரை நியமித்து பணியை விரைவில் முடியுங்கள். இவரை தொடர்ந்து பணி செய்யவிட்டால் 15 ஆண்டுகள் ஆனாலும் பணியை முடிக்கமாட்டார்” என கண்காணிப்பு பொறியாளரிடம் அமைச்சர் கடிந்து கொண்டார்.

அதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர், “பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம் கட்டும் பணியை ஆய்வு செய்தீர்களா? வாரத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்திருந்தால் கூட இதன் நிலை தெரிந்திருக்கும். பணிகள் இவ்வளவு தமாதமாக நடைபெறுவதை உயர் அதிகாரிகள் அல்லது எங்களிடம் தெரிவித்தீர்களா?” எனக் கேட்டார். தான் பொறுப்பேற்று 3 மாதங்களே ஆவதாக அவர் தெரிவித்ததற்கு, “நீங்கள் பொறுப்பேற்ற பின்பு 4 மாடி கட்டிடமா வந்துவிட்டது?” எனக் கேட்டு கடிந்துகொண்டார்.

இந்த ஆய்வின்போது, சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா, மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், போகலூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சத்யா குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x