Published : 06 Aug 2024 01:27 PM
Last Updated : 06 Aug 2024 01:27 PM

சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீனில் விடுதலை

ஃபெலிக்ஸ் ஜெரால்டு

திருச்சி: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு, திருச்சி மத்தியச் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பெண் காவலர்கள் குறித்த அவதூறு செய்தியை ஒளிபரப்பிய புகாரில், சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பு செய்த யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை கடந்த மே மாதம் 10-ம் தேதி இரவு டில்லியில் திருச்சி தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பின்னர், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை போலீஸாரும் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் இவருக்கு கடந்த மே 22-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. அதேசமயம் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் இவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு அப்பீல் செய்திருந்தார் ஃபெலிக்ஸ். அவரது அப்பீல் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவை டவுன்ஹால் காவல் நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியது. கோவை, திருச்சி ஆகிய வழக்குகளில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலையில் ஜாமீனில் விடுதலையானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x