Published : 05 Aug 2024 09:56 PM
Last Updated : 05 Aug 2024 09:56 PM

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: 2 விசைப் படகுகளையும் சிறைபிடித்தது இலங்கை கடற்படை

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க சென்ற 2 விசைப் படகுகள் மற்றும் அதிலிருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன் இறங்குதுறையில் இருந்து இயக்கப்படும் விசைப் படகுகள், பல நாள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த ஆர்.அந்தோணி மகாராஜா(45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உட்பட 12 மீனவர்கள் கடந்த மாதம் 21-ம் தேதி தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் சென்றனர். அதேபோல ஜெ.அந்தோணி தென் டேனிலா(23) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த மாதம் 23-ம் தேதி தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்த 2 விசைப்படகுகளும் திங்கள்கிழமை பிற்பகல் இலங்கைக்கு நடுநிலை எல்லை வழியாக சர்வதேச கடற்பகுதி பகுதியில் சென்றபோது சீரற்ற வானிலை, கடல் நீரோட்டங்கள் காரணமாக இலங்கை கடற்பகுதியில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப் படகுகளுடன் 22 மீனவர்களையும் கைது செய்தனர். தொடர்ந்து மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகளிடம் 22 மீனவர்களும் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, தருவைகுளம் மீனவர்கள், விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டது தொடர்பாக இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படையுடன் எந்த தகவலையும் இலங்கை கடற்படை தெரிவிக்கவில்லையென கூறப்படுகிறது. இதனால் தருவைகுளம் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x