Published : 05 Aug 2024 07:23 AM
Last Updated : 05 Aug 2024 07:23 AM

வயநாட்டில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் வேண்டுகோள்

சென்னை: வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு சங்கராச்சார்யா சுவாமிகள் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

பேரழிவுக்கு காரணம்: மேலும், பலர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படும் நிலையில், தீவிர மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வயநாட்டில் ஏற்பட்ட இந்த பேரழிவுக்கு காடுகளை அழித்தல், திட்டமிடப்படாத கட்டுமானங்கள், காலநிலை மாற்றம் போன்றவை காரணம் என புவியியலாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இத்தகைய பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது ஆதரவையும், நிவாரணத்தையும் வழங்க வேண்டியது அவசியம்.

அந்தவகையில் காஞ்சி காமகோடி பீடம் சார்பில் நிவாரண உதவிகளை வழங்க, மடத்தின் அனைத்து பக்தர்களுக்கும், விருப்பமுள்ளவர்களுக்கும் மடத்தின் ஜகத்குரு புனித சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி நிவாரணத்துக்கான பங்களிப்புகளை மடத்தின் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா அறக்கட்டளையின் (HHJSS Golden Jubilee Charitable Trust) வங்கிக் கணக்குக்கு (HDFC Bank, Royapettah - Acc.No: 50100250949824, IFSC:HDFC0003631) நேரடியாக அனுப்பலாம். பின் அதன் விவரங்களை siesvs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதுதவிர, நிவாரணப் பொருட்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் மேலாளருக்கும், கேரளா-670645, வயநாடு, மானந்தவாடி, நல்லூர்நாடு போஸ்ட், பழம்பிள்ளை வீடு, ஜி.ஜி.கிருஷ்ணன் என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x