Published : 04 Aug 2024 05:47 PM
Last Updated : 04 Aug 2024 05:47 PM

குவாரிகளை திறக்க வலியுறுத்தி ஆக.8-ல் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம்

சென்னை: நிறுத்தப்பட்ட மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி ஆக.8-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் இயங்கி வந்த 17-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

பின்னர் முழுமையாக ஆன்லைன் மூலமாக மணல் வழங்கப்பட்டது. தற்போது மணல் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் கட்டுமானத் தொழில், லாரி தொழிலில் ஈடுபட்டு வரும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், ஒப்பந்ததாரர்களை வைத்து மணல் விற்பனை செய்யக் கூடாது என்றும் பொதுப்பணித்துறையே ஆறுகளில் இருந்து நேரடியாக மணலை எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் ஆக.8-ம் தேதி சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 30 மணல் லாரி சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x