Last Updated : 04 Aug, 2024 02:08 PM

1  

Published : 04 Aug 2024 02:08 PM
Last Updated : 04 Aug 2024 02:08 PM

தமிழகம் முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: நெல்லைக்கு புதிய காவல் ஆணையர் நியமனம்

தமிழக அரசு

சென்னை: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலர் தீரஜ் குமார் இன்று (4 ஆம் தேதி) பிறப்பித்த உத்தரவு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் காவலர் வீட்டு வசதி கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்பில் இருந்த சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கடந்த 31ம் தேதி பணி ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக உள்ள தினகரன், அப்பிரிவில் ஏற்கெனவே சைலேஷ் குமார் யாதவ் வகித்து வந்த பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.

பொதுப்பிரிவு ஐஜி டி.செந்தில் குமார் மேற்குமண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த ஐஜி பவானீஸ்வரி பணியமைப்பு (Establishment) பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஐஜியாக இருந்த ரூபேஷ் குமார் மீனா திருநெல்வேலி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில மனித உரிமை ஆணைய ஐஜி மகேந்தர் குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்த ஐஜி பி.சாமூண்டீஸ்வரி பொதுப்பிரிவு ஐஜியாக்கப்பட்டுள்ளார். குற்றப்பிரிவு ஐ.ஜி ஏ.ராதிகா சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த பி.கே.செந்தில்குமாரி குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவலர் நலன் பிரிவு ஐஜி நஜ்முல் ஹோடா நவீன மயமாக்கல் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி காவல் ஆணையராக இருந்த பா.மூர்த்தி திருநெல்வேலி சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த பிரவேஷ் குமார் சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த அபிஷேக் தீக் ஷித் ரயில்வே டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் சரக டிஐஜி அபினவ் குமார் ராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். அங்கிருந்த எம்.துரை காவலர் நல டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் தேவராணி வேலூர் சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்த சரோஜ் குமார் தாக்கூர் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x