Last Updated : 02 Aug, 2024 12:37 PM

 

Published : 02 Aug 2024 12:37 PM
Last Updated : 02 Aug 2024 12:37 PM

இலங்கை கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்க: மத்திய அரசுக்கு விசிக கோரிக்கை

புதுடெல்லி: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கொலை வழக்கில் கைதுசெய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ராமேஸ்வரம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 2000 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கார்த்திகேயன் என்பவரின் படகு சேதம் அடைந்ததால் நான்கு மீனவர்கள் கடலில் குதித்துள்ளனர்.

அவர்களில் மலைச்சாமி, மூக்கையா, முத்து முனியாண்டி ஆகிய மூவரையும் இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. கடலில் குதித்த ராமச்சந்திரன் என்பவரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர் மலைச்சாமி இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள புங்குடு தீவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்து விட்டதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது.

இந்த மரணம் விபத்தினால் ஏற்பட்டது அல்ல; இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலால் உண்டானதாகும். எனவே, இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவதும், அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதும், மீனவர்களை சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவ மக்களும் தமிழக அரசும் மத்திய அரசைப் பலமுறை வலியுறுத்தியும் கூட இதில் உருப்படியான எந்த நடவடிக்கையையும் மத்திய பாஜக அரசு எடுக்க மறுக்கிறது.

தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாக இந்திய வெளியுறவுத்துறை கருதுவதில்லை. அவர்களை இரண்டாந்தர குடிமக்களாகவே கருதுகிறது என்பதே இதற்கு காரணம்.

இலங்கைக் கடற்படையின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கப்பட வேண்டும். இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட நம் மீனவர்கள் படகுகளை மீட்டுத் தரவும் இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x