தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

சென்னை: நீலகிரி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஆக. 1) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

30-40 கி.மீ. வேகத்தில் வலுவான தரைக் காற்றும் வீசக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆக.2, 3-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 4, 5,6-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சின்கோனாவில் 7 செ.மீ., வால்பாறை, சோலையாரில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு, மத்திய மேற்கு,தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், மத்திய அரபிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதி, கேரள கடலோர பகுதிகள், அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஆக.2-ம் தேதிவரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் 4-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in