Published : 31 Jul 2024 04:04 PM
Last Updated : 31 Jul 2024 04:04 PM

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு: ஆயிரக்கணக்கான வாழைகள் நீரில் மூழ்கின

சிறுமுகை அருகே நீரில் மூழ்கிய வாழை மரங்களில் இருந்து தார்களை வெட்டி வைத்துள்ள விவசாயிகள்.

மேட்டுப்பாளையம்: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துவருவதால், சிறுமுகை பகுதியில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் நீரில் மூழ்கின. கோவை மாவட்டம், சிறுமுகையில் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியான லிங்காபுரம், காந்தவயல் உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் பெருமளவில் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கதளி, ரோபஸ்டா, நேந்திரன் ஆகிய வாழைகளை பயிரிட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு வாழைத்தார்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கேரளா மற்றும் நீலகிரி மலைக்காடுகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மாயாற்றில் வரும் வெள்ளம் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடல் போல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள வாழை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்து, இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின.

இதையடுத்து, விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டி அகற்றி வருகின்றனர். வாழைத்தார்களை பரிசல்கள் மூலம் கரைக்கு கொண்டு வந்து சந்தையில் விற்க திட்டமிட்டுள்ளனர். இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, “வாழைத்தார்களை அப்படியே விட்டால் நீரில் அழுகிவிடும். எனவே, பரிசலில் சென்று முடிந்தவரை வாழைத்தார்களை வெட்டி கொண்டு வந்துள்ளோம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x