Published : 31 Jul 2024 02:59 PM
Last Updated : 31 Jul 2024 02:59 PM

அப்பாவுவுக்கு எதிரான அதிமுக நிர்வாகி வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

பேரவைத் தலைவர் அப்பாவு | கோப்புப்படம்

சென்னை: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையை, எம்பி-எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார். அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய பேரவைத் தலைவருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததை அடுத்து, பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை தொடரும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் என்ற முறையில் பாபு முருகவேல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை எம்பி-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆக. 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x