Published : 31 Jul 2024 05:08 AM
Last Updated : 31 Jul 2024 05:08 AM

மழை பாதிப்பு பகுதிகளில் முன்கூட்டியே 365 மீட்பு வீரர்கள் நிலைநிறுத்தம்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

கோப்புப் படம்

சென்னை: வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்படும் இடங்களில் இருந்து பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் நீலகிரி, கோயம்புத்தூர் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களிலும் மீட்பு, நிவாரணப்பணிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்ள, தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 365 வீரர்கள் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் திருச்சி மாவட்டங்களில் முன்கூட்டியே நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பேரிடர் மீட்புப்படைகள் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

பேரிடர் தொடர்பான தகவல்களை அனைத்து துறை அலுவலர்களுக்கும் பொது மக்களுக்கும் தெரிவிக்க, மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம், மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணிநேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. மக்கள் 1070மற்றும் 1077 ஆகிய கட்டணமில்லாதொலைபேசி எண்கள், 94458 69848எண் மூலம் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x