Published : 30 Jul 2024 05:17 PM
Last Updated : 30 Jul 2024 05:17 PM

தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை; மூவருக்கு 18 மாதம் சிறை: 5 படகுகள் அரசுடமை - இலங்கை கோர்ட் தீர்ப்பு

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ள இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம், இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்ட 3 மீனவர்களுக்கு தலா 18 மாதம் சிறை தண்டனை விதித்ததுடன், 5 படகுகளை அரசுடமையாக்கியும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் 30-ம் தேதியன்று கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன், ஜார்ஜ் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று நாட்டுப் படகுகள், நம்புதாளை கடற்பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற பெரியசாமி என்பவருக்குச் சொந்தமான ஒரு நாட்டுப்படகு என மொத்தம் நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடலுக்குச் சென்ற சிபிராஜ், செல்வகுமார், மணிகண்டன், நைனா முகமது ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப்படகுகளுடன் அதிலிருந்த 17 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 42 தமிழக மீனவர்கள் மீதான வழக்கு செவ்வாய்க்கிழமை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், 2 பாம்பன் நாட்டுப் படகுகள், 1 நம்புதாளை நாட்டுப் படகு, 2 புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகுகள் என மொத்தம் 5 படகுகளை அரசுடமையாக்கி உத்தரவிட்டார்.

மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 23 மீனவர்களை விடுதலை செய்த நீதிபதி, பாம்பனைச் சேர்ந்த அந்தோணி லுகாஸ் (55), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் என மூவர் இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்டதால் அவர்கள் மூவருக்கும் தலா 18 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், மீதமுள்ள 7 பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள், 9 புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு ஆகஸ்ட் 8 வரையிலும் நீதீமன்ற காவலை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 23 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x