Published : 24 Aug 2014 09:16 AM
Last Updated : 24 Aug 2014 09:16 AM
தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 4,883 மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்குநர் பேராசிரியர் எம்.தேவதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 4,883 மாணவ-மாணவிகளுக்கு திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது.
பயனாளிகளின் மொத்த எண்ணிக்கையில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீடு பின்பற்றப்படும். கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கட் ஆப் மார்க் (1200-க்கு) பின்வருமாறு:
கட் ஆப் மார்க்
பொதுப்பிரிவு 1,088 மற்றும் அதற்கு மேல்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிசி, எம்பிசி) - 968 மற்றும் அதற்கு மேல்
ஆதி திராவிடர் - 847 மற்றும் அதற்கு மேல்
பழங்குடியினர் - 818 மற்றும் அதற்கு மேல்.
மேற்குறிப்பிட்ட கட் ஆப் மதிப்பெண் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிகளில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
www.tndce.in
www.tndcescholarship.org
விண்ணப்பத்துடன் சான்றொப்பம் பெறப்பட்ட பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தகுதியுள்ள மாணவ-மாணவிகள் தற்போது தாங்கள் படிக்கும் கல்லூரி முதல்வர்கள் மூலமாக கல்லூரி கல்வி இயக்குநருக்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்
தேர்வுசெய்யப்படும் மாணவர்கள் பட்டப் படிப்பு படிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT