Last Updated : 28 Jul, 2024 05:39 PM

1  

Published : 28 Jul 2024 05:39 PM
Last Updated : 28 Jul 2024 05:39 PM

‘‘மாநில அரசின் தோல்விகளை மறைக்க மத்திய அரசை சாடுகிறார் ஸ்டாலின்’’ - பாஜக மேலிட இணை பொறுப்பளர்

பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி

மதுரை: ‘மாநில அரசின் தோல்விகளை மறைக்க மத்திய அரசு மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார்’ என பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி கூறினார்.

தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகரரெட்டி, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரகளிடம் இன்று கூறியதாவது: நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்காதது கண்டிக்கதக்கது. முதல்வரின் இந்த நடவடிக்கை தமிழக மக்களுக்கு எதிரானது. அரசியல் காரணங்களுக்காக முதல்வர் இவ்வாறு நடந்துள்ளார். இது நியாயமற்ற செயலாகும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழக அரசின் தோல்விகளை திசை திருப்புவதற்காக முதல்வர் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகிறார்.

தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். அரசியல் கொலைகளுடன் மேலும் ஏராளமான கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முதல்வர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நீட் தேர்வை இண்டியா கூட்டணி முற்றிலும் புறக்கணித்து வருகிறது. அதனால் தான் நீட் வினாத்தேர்வு கசிவை பெரிதுப்படுத்துகின்றனர். கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் கூட வினாத்தாள் கசிந்து, 9 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி வரவுள்ளது. ஏழை மக்கள் விநாயகர் சிலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். போலீஸார் அங்கு சென்றும் பிரச்சினை செய்கின்றனர். தமிழக அரசு முற்றிலும் வாக்கு வாங்கி அரசாக செயல்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 70 பேர் உயிரிழந்தனர். இதற்கு மக்கள் நிச்சயம் பதிலளிப்பார்கள். தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும். மத்திய பட்ஜெட் சிறந்த பட்ஜெட், மக்களுக்கான பட்ஜெட், பெண்கள், ஏழை மக்கள், இளைஞர் நலன் மற்றும் விவசாயிகள் நலனுக்கான பட்ஜெட் இது. தமிழக பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதா?

மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு முதல்வர் படத்தை ஒட்டி விளம்பரம் செய்கிறது. மத்திய பட்ஜெட்டை குறைகூறி மக்களை திசை திருப்ப தமிழக முதல்வர் நினைக்கிறார். தமிழக முதல்வர் வாக்குக்காக மத்திய அரசை குற்றம் சாட்டும் அரசியல் செய்யாமல் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து மாநிலங்களின் அனைத்து கலாச்சாரங்களையும் குறிப்பாக தமிழக கலாச்சாரத்தை பிரதமர் மதிக்கிறார்.

தமிழகத்திற்கு பல திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மாநிலத் தலைவர் அண்ணாமலை தெளிவாக விளக்கியுள்ளார். இதை அரசியலாக்க நினைக்கின்றனர். ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாததால் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுதாகர்ரெட்டி கூறினார். பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x