Published : 28 Jul 2024 08:53 AM
Last Updated : 28 Jul 2024 08:53 AM

அரசு பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை அகற்ற தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்

சென்னை: தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கியது போல அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களையும் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிர்ப்பலி சம்பவம் எதிரொலியாக கல்வராயன் பகுதி மலைவாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், ‘‘கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் உள்ளதா, இல்லையா என்பது குறித்து விளக்கப்படவில்லை. பொத்தாம், பொதுவாக கடந்த 10 ஆண்டுகளில் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது’’ என்றனர்.

மேலும், ‘‘மக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சாதி பெயர்கள் உள்ளன. தெருப் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை அகற்றியதுபோல, பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களையும் அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அறிவுறுத்தினர்.

இந்த வழக்கில் மீண்டும் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ் மணியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்றனர். அப்போது ஏற்காடு வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரி, பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ.9.30 கோடியை ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் அந்தத் தொகை இன்னமும் முழுமையாக அப்பகுதிக்கு சென்றடையவில்லை எனக் கூறி அதற்கான ஆவணங்களையும் நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.

அதையேற்ற நீதிபதிகள், ‘இது தொடர்பாக நீங்களும் தனியாக சென்று ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கலாம்’ என அனுமதி வழங்கி விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x