Published : 28 Jul 2024 05:17 AM
Last Updated : 28 Jul 2024 05:17 AM

நலத்திட்ட பொருட்களுடன் மாணவர்களின் படங்கள் பதிவேற்றம்: கூடுதல் பணிச்சுமையால் ஆசிரியர்கள் அதிருப்தி

கோப்புப்படம்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்களின் படங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் உத்தரவு நீக்கப்படாததால் ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசுஉதவி பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடைகள், காலணிகள், மிதிவண்டிகள் உள்ளிட்ட இலவச நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2024-25) மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதர நலத்திட்ட பொருட்களும் படிப்படியாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே நலத்திட்ட பொருட்களை வழங்கும் போதுஅதை ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த மாதம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நெட்வொர்க் பிரச்சினை: அதாவது, எமிஸ் தளத்தில் பாடநூல், சீருடை, காலணி என ஒவ்வொரு மாணவரும் பெற்றுக்கொண்ட பொருட்களின் படங்களை தனித்தனியாக எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஏற்கெனவே இந்த தளத்தில் நெட்வொர்க் சரிவர கிடைப்பதில்லை.

கூடுதல் பணிச்சுமையாக இருப்பதால் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை பள்ளிக்கல்வித் துறையும் ஏற்றுக் கொண்டதாகவும், படங்களை பதிவேற்ற தேவையில்லை என்று தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம் செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் துறைசார்ந்த அதிகாரிகள் எமிஸ் தளத்தில் படங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென கூறிவிட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கற்பிக்கும் பணி பாதிப்பு: இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, ‘‘படங்கள் எடுத்து அதை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும். ஒரு வகுப்புக்கு 50 மாணவர்கள் இருந்தால் ஒரு ஆசிரியர் நூற்றுக்கணக்கான படங்களை எடுத்து பதிவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் கற்பிக்கும் பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை’’ என்றனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘எமிஸ் தளத்தில் மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு விவரங்களை உறுதிசெய்தால் போதும். ஆசிரியர்கள் படங்களை பதிவு செய்ய தேவையில்லை. பிளஸ் 1 மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை மட்டும் படம் பிடித்துபதிவு செய்யவே அறிவுறுத்திஉள்ளோம்.

ஏனெனில், நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு தரப்படும் மிதிவண்டிகளில் ‘எமிஸ்’ எண்கள் பொறிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதன்மூலம் மிதிவண்டிகளின் உதிரி பாகங்கள் சேதமடைந்தால் அதைஉரிய மாணவர்களுக்கு மாற்றிதர இயலும். மேலும், முறைகேடுகளையும் தவிர்க்க முடியும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x