Published : 28 Jul 2024 05:21 AM
Last Updated : 28 Jul 2024 05:21 AM

தெற்கு ரயில்வேயில் முக்கிய திட்ட பணிகள்: ரயில்வே இணை அமைச்சர் ஆலோசனை

சென்னை: தெற்கு ரயில்வேயில் செயல்படுத்தப்படும் ரயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிகள் உட்பட பல்வேறு முக்கிய திட்டப் பணிகள் குறித்து ரயில்வே இணை அமைச்சர் வி.சோமண்ணா நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு ரயில்வே இணை அமைச்சர் வி.சோமண்ணா நேற்று வருகை தந்தார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் தலைமை வகித்து, தெற்கு ரயில்வேயின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தெற்கு ரயில்வேசெயல்பாடுகளின் பல்வேறு அம்சங்களை அமைச்சர் சோமண்ணா பாராட்டினார். மேலும்,தேவைப்படும் இடங்களில் திருத்த நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.

ரயில்வே பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை அமைச்சர் ஆய்வு செய்து விவாதித்தார். குறிப்பாக, அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரயில் நிலைய மறுமேம்பாட்டு திட்டங்களின் முன்னேற்றம், ரயில்வே உள்கட்டமைப்பு திட்டப் பணிகள் மற்றும் ரயில்வே தண்டவாளத்தை மேம்படுத்தி ரயில் வேகத்தை அதிகரிக்கும் நடவடிக்கை, ரயில்களின் கால அட்டவணை, ரயில்வே சொத்துகளை பராமரித்தல் மற்றும் சரக்கு ஏற்றுதலை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல்கிஷோர் மற்றும் தெற்கு ரயில்வே முதன்மை துறைத் தலைவர்கள், சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் பி.ஈர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

தெற்கு ரயில்வேயில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டப் பணிகளை கேட்டறிந்தார். ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, அவர், புதுச்சேரியில் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை நேரடியாக ஆய்வு செய்யவும், சென்னை எழும்பூர் - திருச்சிவழித்தடத்தில் ரயில் தண்டவாளத்தை ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x