Last Updated : 26 Jul, 2024 02:38 PM

 

Published : 26 Jul 2024 02:38 PM
Last Updated : 26 Jul 2024 02:38 PM

பில்லூர் அணை 3-வது முறையாக நிரம்பியது: உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றம்

பில்லூர் அணையின் 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றை நோக்கி வெளியேற்றப்படும் உபரி நீர்.

கோவை: இந்த ஆண்டில் இதுவரை மூன்றாவது முறையாக பில்லூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனையடுத்து உபரி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப் பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. பில்லூர் அணையை மையப்படுத்தி கோவை மாநகராட்சிக்கான பில்லூர் 1 மற்றும் பில்லூர் 2 ஆகிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், பில்லூர் அணை அருகில் உள்ள பவானி ஆற்றை மையப்படுத்தியும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பில்லூர் அணை மற்றும் பவானி ஆற்றை மையப்படுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தேவையான 10-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கேரளா மற்றும் நீலகிரி மலைக்காடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக கொண்டுள்ள பில்லூர் அணையின் நீர்த்தேக்க அளவு 100 அடி ஆகும். இதில், 97.5 அடியை கடந்தால் பில்லூர் அணை நிரம்பியதாக கணக்கில் கொள்ளப்படும். அதைத்தொடர்ந்து 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்.

நடப்பாண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் பில்லூர் அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி பில்லூர் அணை முதல் முறையாகவும், தொடர்ந்து இந்த மாதம் 16-ம் தேதி இரண்டாவது முறையாகவும் பில்லூர் அணை நிரம்பியது. அதன் தொடர்ச்சியாக, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மூன்றாவது முறையாக பில்லூர் அணை இன்றும் (ஜூலை 26) நிரம்பியது.

இதையடுத்து அணையின் 4 மதகுகள் வழியாக காலை 11 மணி முதல் பவானி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் வெளியேற்றத்தால் பவானி ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

ஆற்றில் யாரும் இறங்கக்கூடாது, பரிசல் மூலம் கடக்க முயற்சிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. தற்போது விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x