Published : 26 Jul 2024 04:06 AM
Last Updated : 26 Jul 2024 04:06 AM

மாதம் ரூ.1,000 - ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் வருமான வரம்பு, ஒதுக்கீடு என எந்த பாகுபாடும் இல்லை!

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், இத்திட்டம் குறித்து சமூகநலத் துறை செயலர்ஜெய முரளிதரன் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது:

உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம்’ போல, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் அறிமுகம் செய்யப்படும். இவர்களது வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூ.1,000 செலுத்தப்படும்’ என இந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் எழுதிய கடிதத்தில், ‘புதுமைப்பெண் திட்டத்தில் 3.28 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். அதேபோல, தமிழ்ப் புதல்வன் திட்டத்திலும் 3.28 லட்சம் மாணவர்கள் என கணக்கில் கொண்டால், ஒரு மாணவருக்கு மாதம்ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.393.60 கோடி மற்றும் இத்திட்டத்தை செயல்படுத்த நிர்வாக செலவு ரூ.7.87 கோடி தேவைப்படுவதால், ஓராண்டுக்கு ரூ.401.47 கோடி நிதி வழங்க வேண்டும்’ என்று கேட்டிருந்தார்.

இதை பரிசீலித்த அரசு, இந்த நிதி ஆண்டு முதல், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அறிமுகம்செய்துள்ளது. வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் மாதம் ரூ.1,000உதவித் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.360 கோடிக்குநிதி ஒப்புதல் அளித்தும் உத்தரவிடப்படுகிறது. அடுத்த நிதி ஆண்டில் இத்திட்டத்துக்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீட்டை, சமூக நலத் துறை மானிய கோரிக்கையில் கோருமாறும் சமூகநலத் துறை ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது.

இணையதளம் மூலம் விண்ணப்பம்: ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க, பிரத்யேக விண்ணப்ப படிவம் பதிவேற்றம் செய்யப்படும். படிவத்தில் மாணவர்கள் அளிக்கும் ஆதார் எண்ணை, சம்பந்தப்பட்ட கல்லூரியில் இருந்து பள்ளிக்கல்வி துறையின் ‘எமிஸ்’ தரவுகள் மூலம் சரிபார்த்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் அவர்கள் படித்தது உறுதி செய்யப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவருக்கு பிரத்யேக எண் உருவாக்கி, அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் மாணவர், தமிழகத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி பாடப் பிரிவில் படிப்பவராக இருக்க வேண்டும். உயர்கல்வி என்பது கலை அறிவியல், தொழில்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி, ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இத்திட்டத்தை செயல்படுத்த, மாநிலஅளவில் தலைமைச் செயலர் தலைமையில், 15 துறைகளின் செயலர்களை உறுப்பினர்களாக கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. சமூகநலத் துறை செயலரை தலைவராக கொண்டுமாநில அளவிலான மேற்பார்வை குழு,மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டுமாவட்ட அளவிலான செயல்பாட்டு குழு ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

வருமான உச்ச வரம்பு, ஒதுக்கீடு என எந்த பாகுபாடும் இல்லை: ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் பயன்பெற, வருமான உச்ச வரம்பு, இனம், ஒதுக்கீடு என எந்த பாகுபாடும் இல்லை. அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்றவர்கள், அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்கள் இத்திட்டத்தில் முழுமையாக பயன் பெறலாம். அரசு பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியிலும், 8, 9 அல்லது 10-ம் வகுப்பு வரை படித்து ஐடிஐ பயிலும் மாணவர்களும் பயன்பெறலாம்.

வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருந்தாலும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். ஒரே குடும்பத்தில் எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றாலும், அனைவரும் இத்திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த பாடப் பிரிவில் பயில்பவர்களுக்கு முதல் 3 ஆண்டுகள் மட்டும் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

தமிழக அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, பிற மாநிலத்தில் மத்திய அரசின்கீழ் செயல்படும் ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்இஆர் போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள்.

தொலைதூர கல்வி, அஞ்சல்வழி, அங்கீகரிக்கப்படாத உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்பவர்கள் இத்திட்டத்தில் ஊக்கத் தொகை பெற இயலாது. மற்ற மாநில பள்ளிகளில் பயின்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது என்று வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x