Published : 26 Jul 2024 05:54 AM
Last Updated : 26 Jul 2024 05:54 AM

போலி பேராசிரியர்கள் நியமன விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளிக்க ஆளுநர் உத்தரவு

சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமன விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 480-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 224 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதாக போலியாக கணக்கு காட்டப்பட்டிருப்பதாக அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு சில நாட்களுக்கு முன்பு ஆதாரங்களுடன் குற்றம்சாட்டியது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள கல்லூரி நிர்வாகத்தினர் மீதும், சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர், அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் தலைவர், தமிழக ஆளுநர், முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர், அண்ணா பல்கலைகக்கழக துணைவேந்தர் ஆகியோருக்கு புகார் மனுவும் அனுப்பியிருந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், 189 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுவதை அவர்களின் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கண்டறிந்துள்ளோம். ஒரு பேராசிரியர் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதும் தெரியவந்தது. இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தினர் மீதும், சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இந்நிலையில், தமிழக ஆளுநரும், அண்ணா பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் நியமனத்தில் நடந்துள்ள விதிமுறைகள் குறித்து உரிய விளக்கங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு துணைவேந்தர் ஆர்.வேல்ராஜுக்கு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x