Published : 26 Jul 2024 06:42 AM
Last Updated : 26 Jul 2024 06:42 AM

பள்ளி வேன் ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு: உயிர் பிரியும் தருணத்திலும் விபத்து தவிர்ப்பு @ வெள்ளகோவில்

மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பள்ளி வேனை சாலையோரம் நிறுத்திவிட்டு உயிரிழந்த ஓட்டுநர் சேமலையப்பன்.

வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் பள்ளிக் குழந்தைகளுடன் வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த போதும், குழந்தைகளைக் காப்பாற்றிய சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி. நகரைச் சேர்ந்தவர் எஸ்.சேமலையப்பன் (49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் அருகிலுள்ள தனியார்மெட்ரிக் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (ஜூலை 24) பள்ளி முடிந்து குழந்தைகளை வேனில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

நெஞ்சுவலியால் துடித்தார்: வெள்ளக்கோவில் காவல் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வேன் குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தபோது,திடீரென நெஞ்சு வலிப்பதாக சேமலையப்பன் கூறியுள்ளார். வலியால் துடித்த அவர் மிகவும் சிரமப்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு, அப்படியே வேனின் ஸ்டீயரிங்கில் மயங்கிச் சரிந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளகோவில் போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் விபத்தை தவிர்த்து, உயிர் பிரியும்தருணத்திலும் சாலையோரத்தில் பத்திரமாக வேனை நிறுத்திய சேமலையப்பனின் செயல் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று வருகிறது.

முதல்வர் நெகிழ்ச்சி: இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘இறக்கும் தருவாயிலும் இளம்பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்!’ என குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x