Published : 24 Jul 2024 05:13 AM
Last Updated : 24 Jul 2024 05:13 AM

சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி; சதுரடிக்கு ரூ.15 முதல் ரூ.100 வரை கட்டணம்: மாநகராட்சிகளுக்கு தனித்தனியாக நிர்ணயம்

சென்னை: தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுய சான்று அடிப்படையில் இணையதளம் மூலம் உடனடி அனுமதி வழங்குவதற்கான ஒருங்கிணைந்த கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை: பட்ஜெட் அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 2500 சதுரடி வரையிலான மனையில், 3500 சதுரடி வரை கட்டப்படும் கட்டுமானத்துக்கு சுய சான்று அடிப்படையில், ஒற்றை சாளர முறையில், இணையவழி கட்டிட அனுமதி பெறுவதற்கு, செலுத்த வேண்டி கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இணையவழி கட்டிட ஒப்புதலுக்கு ஒரு சதுரடிக்கு ரூ.100 வீதம், ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1076 ஒருங்கிணைந்த கட்டணமாக நிர்ணயிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாக இயக்குநர், அனைத்து மாநகராட்சிகளையும் 5 நிலையாகவும், நகராட்சிகளை 4 நிலைகளாகவும் வகைப்படுத்தி, ஒவ்வொரு நிலைக்கும் ஒரே மாதிரியான கடடணத்தை பரிந்துரைத்துள்ளார். பேரூராட்சிகளின் இயக்குநர் பேரூராட்சிகளுக்கு 4 நிலைகளுக்கும் ஒரே கட்டணத்தை பரிந்துரைத்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சிகள் இந்த கட்டணங்களை நிர்ணயிப்பதில் இருந்து தளர்வு செய்யலாம். ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் நிர்ணயிக்கப்பட்ட பரிசீலனை கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்களை வசூலிப்பதில் இருந்து விலக்களிக்கலாம். சுயசான்று மூலம் கட்டிட உரிமம் பெற்ற பிறகு காலிமனை வரி, பாதாள சாக்கடை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், கண்டறியப்படும் விதிமீறல்கள் மீது, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிபந்தனை விதிக்கலாம்.

குடியிருப்பு கட்டுமானம் 325 சதுர மீட்டர் அதாவது 3500 சதுரடிக்கு மேல் இருந்தால் அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது வசூலிக்கப்படும் கட்டண விகிதங்களை தொடர்ந்து வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சென்னை மாநகராட்சியில், 3500 சதுரடி (325 சதுர மீட்டர்) வரையிலான குடியிருப்பு கட்டுமான அனுமதிக்கு ஒரு சதுரடிக்கு ரூ.100, ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1076 கட்டணமாக செலுத்த வேண்டும். மீதமுள்ள 20 மாநகராட்சிகளில் 3 சிறப்பு நிலை ‘ஏ’ மாநகராட்சிகளில் சதுரடிக்கு ரூ.88, சதுரமீட்டருக்கு ரூ.950-ம், 3 சிறப்பு நிலை ‘பி’ மாநகராட்சிகளில் சதுரடிக்கு ரூ.84, சதுர மீட்டருக்கு ரூ.900-ம், தேர்வு நிலை மாநகராட்சிகள் 5-ல், சதுரடிக்கு ரூ.79, சதுர மீட்டருக்கு ரூ.850-ம், நிலை 1 மற்றும் 2 என்ற வகையில் 9 மாநகராட்சிகளில் சதுரடிக்கு ரூ.74, சதுர மீட்டருக்கு ரூ.800-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

நகராட்சிகளை பொறுத்தவரை, 45 சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் சதுரடிக்கு ரூ.74, சதுரமீட்டருக்கு ரூ.800-ம், நிலை-1, நிலை-2 என 93 நகராட்சிகளில் ஒரு சதுரடிக்கு ரூ.70, சதுர மீட்டருக்கு ரூ.750-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். பேரூராட்சிகளை பொறுத்தவரை, 62 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் சதுரடிக்கு ரூ.70, சதுர மீட்டருக்கு ரூ.750-ம், 179 தேர்வு நிலை பேரூராட்சிகளில் சதுரடிக்கு ரூ.65, சதுர மீட்டருக்கு ரூ.700-ம், 190 நிலை -1 பேரூராட்சிகளில் சதுரடிக்கு ரூ.55, சதுர மீட்டருக்கு ரூ.590-ம், நிலை-2 பேரூராட்சிகளில் சதுரடிக்கு ரூ.45 மற்றும் சதுரமீட்டருக்கு ரூ.485-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் சுய சான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அரசாணையில், தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளை பொறுத்தவரை, சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள புறநகர் ஊராட்சிகளில் ஒரு சதுரடிக்கு ரூ.27 மற்றும் சதுர மீட்டருக்கு ரூ.290-ம், இதர பகுதிகளில் புறநகர் கிராம ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.25, சதுர மீட்டருக்கு ரூ.269, சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுரடிக்கு ரூ.22 மற்றும் சதுரமீட்டருக்கு ரூ.237, இதர ஊராட்சிகளில் சதுரடிக்கு ரூ.15 மற்றும் சதுர மீட்டருக்கு ரூ.162-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x