Published : 24 Jul 2024 06:30 AM
Last Updated : 24 Jul 2024 06:30 AM

கரோனாவின்போது இறந்த முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு: இலங்கை அரசு மன்னிப்பு கேட்க முடிவு

இலங்கையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல் எரியூட்ட கொண்டு செல்லப்பட்டது. (கோப்பு படம்)

ராமேசுவரம்: கரோனா பரவலின்போது உயிர்இழந்த முஸ்லிம்களின் உடல்கள் வலுக்கட்டாயமாக எரியூட்டப்பட்டதற்காக இலங்கை அரசு மன்னிப்புக் கேட்க முடிவு செய்துள்ளது.

கரோனா தொற்று பரவலின்போது, உயிரிழந்தோர் உடல்களைப் புதைக்கலாம் என உலகசுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. ஆனால், உலக சுகாதார அமைப்பில் உறுப்பினராக இருக்கும் 182 நாடுகளில், இலங்கை மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை கட்டாயம் எரியூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

மேலும், அந்நாட்டு சுகாதாரஅமைச்சகம், கரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உடலை எரியூட்ட சவப்பெட்டியையும் வாங்கித் தர வேண்டும் என வலியுறுத்தியது. சவப்பெட்டி வாங்க ரூ.20 ஆயிரம் (இலங்கை ரூபாய்) வரை அதிகாரிகள் வசூலித்தனர்.

இலங்கை முஸ்லிம்கள், கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டாம், தங்களின் மத நம்பிக்கையின்படி அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.

இதற்கு இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள், தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டதுடன், வழக்குகளும் தொடரப்பட்டன.

இதையடுத்து, 2021 பிப்ரவரி மாதம் முதல் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இலங்கை நாட்டு அரசு அனுமதித்தது.

இந்நிலையில், கொழும்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட் கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இணைந்து, கரோனா பரவலின்போது உடல்களை எரியூட்டும் அரசின் கொள்கையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கோர வேண்டும் என நேற்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, இலங்கை சுகாதார அமைச்சகம், கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்ட கட்டாயப்படுத்தியது. இது பல்வேறு மதக் குழுக்களையும், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்களையும் வேதனைப்படுத்தியது. குறிப்பாக, முஸ்லிம்களின் மனம் புண்படக் காரணமாகஅமைந்தது.

மேலும், பாதுகாப்பானநல்லடக்கம் மூலம் கரோனா பரவாது என்பதும் உறுதி செய்யப்பட்டது. எனவே, அமைச்சர்களின் கூட்டு கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x