Published : 23 Jul 2024 07:40 PM
Last Updated : 23 Jul 2024 07:40 PM

“மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை” - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சென்னை: “பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில், அக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். அதை புறக்கணிக்கப் போகிறேன்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஏற்கெனவே மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை ஒட்டி, ஒரு நீண்ட அறிக்கை கொடுத்திருக்கிறேன். அதையொட்டி, ஒரு முக்கிய முடிவை நான் எடுத்திருக்கிறேன். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைக்கு தாக்கல் செய்திருக்கின்ற நிதிநிலை அறிக்கை மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

மூன்றாவது முறையாக வாக்களித்த மக்களுக்கு இந்த பாஜக கூட்டணி அரசு எந்த நன்மையும் செய்யத் தயாராக இல்லை என்பதை இந்த நிதிநிலை அறிக்கை தெளிவாக காண்பிக்கிறது. நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு என்று என்னென்ன திட்டங்கள் அறிவிக்கவேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் ட்விட்டரில் வெளியிட்டிருந்தேன். பல கோரிக்கைகளை அதில் எடுத்து வைத்தேன். நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும். கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும். தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலைத் திட்டத்துக்கான ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என்று சில கோரிக்கைகளை வைத்திருந்தேன்.

அந்தக் கோரிக்கைகளில் எதையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. மைனாரிட்டி பாஜகவை, மெஜாரிட்டி பாஜகவாக ஆக்கிய ஒரு சில மாநிலக் கட்சிகளை திருப்திப்படுத்தும் வகையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் சில திட்டங்களை அறிவித்துள்ளார். அறிவித்துள்ளார்களே தவிர, அதையும் நிறைவேற்றுவார்களா என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் சந்தேகம்தான்.

எப்படி தமிழகத்துக்கு மெட்ரோ ரயில் என்று அறிவித்து விட்டு, நிதி ஒதுக்காமல் இன்றைக்கு வரையில் ஏமாற்றி வருவதைப் போல அதுபோல, அந்த மாநிலங்களுக்கும் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. தமிழகம் மிகப் பெரிய இரண்டு இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டது. 37 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பீடு நாம் கேட்டோம். தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இதுவரை 276 கோடி ரூபாய் தான் கொடுத்துள்ளார்கள். அது சட்டப்படி வரவேண்டிய தொகை. இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், இரண்டு மூத்த மத்திய அமைச்சர்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர், நிதியமைச்சர் என்று இருவரும் நேரடியாக பார்த்துவிட்டு சென்றார்கள். இப்படித்தான் தமிழக மக்களை பாஜக மதிக்கின்றதா என்பது தான் என்னுடைய கேள்வி.

தமிழகத்துக்கான எந்த சிறப்புத் திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. நமது கோரிக்கைகள் எதுவுமே இதில் நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. மத்திய பாஜக ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களைங்களையும் நிதி அமைச்சர் மறந்தே போய்விட்டார். தமிழ்நாடு என்ற சொல்லே நிதி நிலை அறிக்கையில் இல்லை என்று சொல்வதைவிட, மத்திய பாஜக ஆட்சியாளர்களின் சிந்தனையிலும், செயலிலும் தமிழ்நாடு இல்லை. பாரபட்சமும் ஏமாற்றமும்தான் இந்த அறிக்கையில் இருக்கிறது. ஒரு நாட்டின் நிதி நிலை அறிக்கை என்பது அந்த நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த வகையில், நிதி ஒதுக்கீட்டில் நீதி இல்லை. அநீதியே அதிகம் உள்ளது.

அரசியலை தேர்தல் களத்தில் பார்த்துக் கொள்ளலாம். இப்போது இணைந்து நாட்டுக்காக பணியாற்றவேண்டும் என்று பிரதமர் நேற்றுதான் சொல்லியிருக்கிறார். அனைத்து பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. ஆனால், அவர் நேற்று சொன்னதற்கு எதிராக இன்றைக்கு அவருடைய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் நன்மைகள் செய்வதுதான் ஒரு சிறந்த அரசு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்படிதான் தமிழக அரசின் செயல்பாடுகளும் இருக்கிறது. இதை பார்த்தாவது, மத்திய அரசு தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வருகின்ற 27-ஆம் தேதி பிரதமரின் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நானும் அதில் பங்கெடுக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவேண்டாம் என்று நான் முடிவெடுத்திருக்கிறேன். அதைப் புறக்கணிக்கப் போகிறேன். தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதே சரியானது என நினைக்கிறேன்.

தமிழகத்தின் தேவைகளை, உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து நாங்கள் போராடுவோம். நாளைய தினம் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் டெல்லியில் போராட்டம் நடத்தப் போகிறார்கள், அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கியிருக்கிறோம்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

இதைத் தொடர்ந்து, 40-க்கு 40 வெற்றிதான் தமிழகம் புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “தமிழக மக்கள் மீது அவ்வளவு ஆத்திரத்தில் இருக்கிறார்கள்” என்று முதல்வர் பதில் அளித்தார்.

தமிழகம் மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லியிருந்தார் பிரதமர், அது பற்றி என்ற கேள்விக்கு, “தமிழ்நாடு மட்டுமா சொன்னார், திருக்குறளும் பிடிக்கும் என்று சொன்னாரே, திருக்குறள் என்று ஒரு வார்த்தை கூட கிடையாது, தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் கிடையாது,” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதபோது, நிறைய திட்டங்கள் இருக்கிறது, மெட்ரோ ரயில் போன்ற திட்டங்கள் இருக்கிறது. தமிழக அரசு எப்படி கையாளும் என்ற கேள்விக்கு, “இதுவரைக்கும் எப்படி கையாண்டு கொண்டிருக்கிறோமோ, நாங்கள் அப்படியே கையாளுவோம்” என்று முதல்வர் பதில் அளித்தார்.

பத்திரப் பதிவு கட்டணங்களை மாநில அரசுகளுக்கு குறைத்திருக்கிறோம் என்று நிதியமைச்சர் சொல்லியிருக்கிறார். அதுகுறித்த கேள்விக்கு, “நான்தான் ஒட்டுமொத்தமாக சொல்லிவிட்டேன். தமிழகத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்கிறார்கள். புறக்கணித்த காரணத்தினால் பிரதமர் கூட்டுகின்ற அனைத்து முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணிக்கப் போகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். முன்னதாக, பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: “பட்ஜெட் மூலம் தேர்தல் கணக்கை தீர்க்க நினைக்கிறது பாஜக அரசு” - முதல்வர் ஸ்டாலின் வேதனை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x