Published : 23 Jul 2024 09:02 AM
Last Updated : 23 Jul 2024 09:02 AM

மினி பேருந்து சேவையை அரசே நடத்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை புறநகரில் தனியார் மினி பஸ்கள் அனுமதிக்கப்படுவதை கைவிட வேண்டுமென்றும், மினி பேருந்து சேவையை அரசே நடத்த வேண்டுமென்று என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் தனியார்கள் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்ட பின்னர், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடுவிழா நடத்த திமுக அரசு திட்டமிட்டிருக்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தற்போது வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளிலும் போக்குவரத்துச் சேவையை வழங்கிடும் நோக்கில் மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் மினி பஸ் திட்டம் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக அரசாணை எண் 338 நாள் 13-06-2024 வெளியிடப்பட்டு, அது 14-06-2024 தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கையில், 30 நாட்களுக்குள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பி வைக்குமாறு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் இந்தத் திட்டத்தினால் பாதிக்கப்படுவோர் கேட்டுக் கொள்ளப்பட்டதோடு, இவை அனைத்தும் 22-07-2024 அன்று நடைபெறும் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இதற்கான கூட்டமும் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ள மணலி, திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் முதன்முறையாக தனியார் மினிபஸ்களை இயக்க அனுமதி வழங்குவது குறித்து பேசப்பட்டதாகவும், இந்தத் தனியார் மினி பஸ் திட்டத்துக்கு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

முதலில், சென்னைப் புறநகர் பகுதிகள் என்று சொல்லி அறிமுகப்படுத்திவிட்டு, பின்னர் இதனை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த திமுக அரசு திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தனியார்கள் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்ட பின்னர், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடுவிழா நடத்த திமுக அரசு திட்டமிட்டிருக்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தனியார்மயமாக்கல் மூலம், ஏழையெளிய மக்கள் அபரிமிதமான பேருந்துக் கட்டணத்தை செலுத்தக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். ரயில்வேயைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக தமிழ்நாட்டில் பேருந்து சேவையை தனியார்மயமாக்கத் துடிப்பது நியாயமா?

தனியார் மினி பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசுப் பேருந்துகளின் வருவாய் மேலும் குறைவதோடு மட்டுமல்லாமல், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகும். ஏற்கெனவே, ஓய்வூதியப் பலன்களுக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருக்கின்ற நிலையில், அகவிலைப்படி உயர்விற்காக அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், தனியார்மயமாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டால், அவர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள், அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்காத சூழ்நிலை உருவாகும்.

மினி பேருந்து சேவையை துவக்குவதில் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. இதனை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இதில் தனியாரை அனுமதிப்பது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இது, பேருந்துக் கட்டண உயர்வு அடிக்கடி ஏற்படவும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலைப் பாதுகாப்பின்மை உருவாகவும் வழிவகுக்கும்.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தனது கவனத்தைச் செலுத்தி, சென்னை புறநகரில் தனியார் மினி பஸ்கள் அனுமதிக்கப்படுவதை கைவிட வேண்டுமென்றும், மினி பேருந்து சேவையை அரசே நடத்த வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x