Published : 23 Jul 2024 05:57 AM
Last Updated : 23 Jul 2024 05:57 AM

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்ய கோரி ஜாபர் சாதிக் மனு

சென்னை: வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை கடத்தியதாக திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவினர் கைது செய்தனர்.

இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்து, அமலாக்கத் துறையும் அவரை கைது செய்தது. இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்தது செல்லாது என அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையடுத்து ஜாபர் சாதிக்கின் மனு குறித்து அமலாக்கத் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதற்கிடையே ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்தக் கோரி அவரது தந்தை அப்துல் ரஹ்மான் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கும் அமலாக்கத் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 31-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x