Published : 22 Jul 2024 05:41 PM
Last Updated : 22 Jul 2024 05:41 PM

தமிழக மீனவர்கள் 10 பேருக்கு சிறைக் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 10 பேருக்கு சிறைக் காவல் நீட்டிக்கவும், கடற்படை வீரர் உயிரிழந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் இலங்கையில் உள்ள மல்லாகம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 25 அன்று இலங்கை கடற்படையினர் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை கைப்பற்றி, படகிலிருந்த முத்துசெட்டி(70), அவரது மகன்கள் மதி (38), ராஜேஷ் (35) மற்றும் வைத்தியநாதன் (45), வானவன்மாதேவியைச் சேர்ந்த கலைமுருகன் (25), கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி (60), கடலூரைச் சேர்ந்த மணி பாலன் (55), ஆந்திராவைச் சேர்ந்த கங்கால கொருமையா மற்றும் 2 மீனவர்கள் என மொத்தம் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்த கைது நடவடிக்கையின் போது, இலங்கை ரோந்துப் படகிருந்த இலங்கை கடற்படை வீரர் ரத்நாயக்க, கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகிலிருந்து தவறி விழுந்தது, மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்த தொடர்பாக விசாரணை நடத்த கங்கேசன்துறை போலீஸார் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில், திங்கட்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுபரஞ்சனி ஜெகநாதன், கடற்படை வீரர் உயிரிழந்தது குறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். மேலும், 10 தமிழக மீனவர்களின் காவலை ஆகஸ்ட் 5 வரையிலும் நீட்டித்து உத்தரவிட்டார். இதனால் 10 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x