Published : 18 Jul 2024 02:17 PM
Last Updated : 18 Jul 2024 02:17 PM

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது

கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் அதற்கான உத்தரவு வழங்கப்பட உள்ளது.

கரூரில் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 12-ம் தேதி முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மேலும் கரூரில் இருந்து தலைமறைவானார்.

இந்நிலையில் இவ்வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டன. அதே நாளில் நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் 13 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 22-ம் தேதி வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு ஜூன் 25-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் விஜயபாஸ்கரை கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். கடந்த ஜூன் 30-ம் தேதி, தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் அவருடன் இருக்கவேண்டும் எனக்கூறி விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் சிபிசிடிஐ மற்றும் வாங்கல் வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களும் ஜூலை 6-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.

தொடர்ந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது வீடு, நிறுவனங்களில் கடந்த 5, 7, 11-ம் தேதிகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர். மேலும், விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை நடத்தினர். அத்துடன் இன்னும் சிலரையும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு ஜூலை 15-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே, கடந்த 5 வாரங்களாக தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் வழக்கின் முக்கிய நபரான பிரவீண் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கேரள மாநிலம் திருச்சூரில் ஜூலை 16-ம் தேதி கைது செய்தனர். பின்னர், அவர்களை கரூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரையும் ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அதிகாலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீண் குளித்தலை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இன்ஸ்பெக்டர் சிறையிலடைப்பு: நில மோசடிக்கு உதவிடும் வகையில் உண்மை ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ‘நான்டிரேஷபிள்’ சான்றிதழ் வழங்கிய சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த பிருதிவிராஜை சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் இரவு சென்னையில் கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று கரூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் அவரை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நீதிபதி பரத்குமார் முன் ஆஜர்படுத்தினர். அவரை ஜூலை 31-வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் சேலம் மத்திய சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் ஒரு வழக்கில் கைது: இந்நிலையில், வாங்கல் போலீஸார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் விஜயபாஸ்கரை கைது செய்வதற்காக கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகசுந்தரத்திடம் அதுதொடர்பான ஆவணங்களை காட்டி அனுமதி பெற்றனர். இதைத் தொடர்ந்து வாங்கல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உத்தரவை திருச்சி மத்திய சிறையில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் வழங்கி கையெழுத்து பெறுவதற்காக வாங்கல் போலீஸார் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x