Last Updated : 17 Jul, 2024 02:08 PM

1  

Published : 17 Jul 2024 02:08 PM
Last Updated : 17 Jul 2024 02:08 PM

‘உஷாரய்யா… உஷாரு’ - பழநி கடையடைப்புப் போராட்டம் குறித்த பாமக சுவரொட்டியால் பரபரப்பு

பழநி: ‘உஷாரய்யா…உஷாரு… பழநி முருகனுக்கு வேண்டுதல் வைத்தவர்களுக்கு மட்டும் போடுங்கள் மொட்டை’ என பழநியில் பாமகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. மேலும், தனியார் வாகனங்கள் கிரிவலப் பாதையில் நுழைய தடை விதித்து தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால் அடிவாரம் பகுதியைச் சேர்ந்த பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு சொந்தமான சாலைகளை தேவஸ்தானம் கையகப்படுத்த முயற்சித்து வருகிறது.

இதையடுத்து ஜூலை 13-ல், மக்களின் பொதுவழிப்பாதை உரிமைகளை பாதுகாக்கவும், நகராட்சியின் உரிமைகளை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்தும் கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு நகர்மன்றம், வர்த்தகர்கள் உட்பட அனைத்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில் இன்று ‘உஷாரய்யா… உஷாரு…’ என கடையடைப்பு போராட்டம் குறித்து பாமக சார்பில் பழநி நகர் பகுதியில் ஒட்டியுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், ‘பழநியில் மொட்டை போட்ட வாலிபரை கண்டுபிடித்து தந்தால் சிறப்பு பரிசு என்பது போல் உள்ளது கடையடைப்புப் போராட்டம். பழநி வாழ் பொதுமக்கள் மற்றும் வணிகர்களே உஷாரய்யா… உஷாரு… திமுகவை எதிர்த்து திமுகவா? நகராட்சி தேவஸ்தானத்தை அடிப்பது போல் அடிக்குமாம். தேவஸ்தானம் வலிப்பது போல் நடிக்குமாம்.

இரண்டுமே திமுக அரசு தானே. இதுதான் உங்க திராவிட மாடலா? யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறீர்கள். பழநி முருகனுக்கு வேண்டுதல் வைத்தவர்களுக்கு மட்டும் போடுங்கள் மொட்டை. அறநிலையத்துறையா? நகராட்சி நிர்வாகமா? அடித்து கொள்வது இருவரும்... மிதிபடுவது மக்களும் வணிகர்களும்…’ என்ற வாசகங்கள் இருப்பதால் பழநியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x