Last Updated : 16 Jul, 2024 12:57 PM

 

Published : 16 Jul 2024 12:57 PM
Last Updated : 16 Jul 2024 12:57 PM

'கோவை புத்தக திருவிழா' - ஜூலை 19-ம் தேதி தொடக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  பேசினார். படம். ஜெ. மனோகரன் 

கோவை: கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் 'கொடிசியா' மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை புத்தகத் திருவிழா ஜூலை 19-ம் தேதி முதல் ஜூலை 28-ம் தேதி வரை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடக்கிறது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16)நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது: தமிழ்நாடு அரசு, நூலகத்துறை மற்றும் கொடிசியா புத்தகத் திருவிழா கமிட்டி இணைந்து இந்த புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெற்றது. சிறைச் சாலைகளுக்கு 2,000 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்த ஆண்டும் அரசு விடுதிகள், மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு உதவும் வகையில் 'புக் டொனேஷன் ட்ரைவ்' நடைபெற உள்ளது.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், வாசிப்பை அதிகரிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் புத்தகத் திருவிழாவின் போது, தினமும் நம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை மேற்கோள்ளப்படும்.

தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த புத்தகத் திருவிழா அமைக்கப்படும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் அனைத்து விதமான புத்தகங்களும் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில், காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனுமதி இலவசம். இந்த ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், அசாம், சத்தீஸ்கர் மற்றும் புதுடெல்லி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பதிப்பாளர்கள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர்.

மேலும் 280-க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. கூடுதல் சிறப்பம்சமாக, புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும், கலைஞர்களும் கலந்து கொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற உள்ளன. மேலும் இளம் படைப்பாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.

கோவை புத்தகத் திருவிழாவின் சிறப்பம்சங்கள்:

ஜூலை 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை)

மாலை 6 மணி: இளம்படைப்பாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெறும்.
விருது பெறுவோர்: இரா. பூபாலன் (கவிதை நூல்), நா.கோகிலன் (புனைவு நூல்)
வாழ்த்துரை: வழக்கறிஞர் K. சுமதி, எழுத்தாளர், பேச்சாளர்

ஜூலை 20 (சனிக்கிழமை)

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வுகள் - இல்லம் தேடி கல்வி பயிற்றுனர்களுக்கான நிகழ்வு
மாலை 6.30 மணி: கொடிசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இந்த விருது ஒன்றரை லட்சம் ரூபாயும், பாராட்டு மடலும் கொண்டதாகும்)
வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுபவர்: மானுடவியல் ஆய்வாளர் முனைவர்.பக்தவத்சல பாரதி
வாழ்த்துரை: பேராசிரியர் S. சித்ரா, தமிழ்த் துறை தலைவர், பாரதியார் பல்கலைக் கழகம்.

ஜூலை 21 (ஞாயிற்றுக்கிழமை)

காலை 11 மணி: கவியரங்கம் - கவிஞர் உமா மோகன்
காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - இளம் படைப்பாளிக்ளுக்கு பயிற்சிப் பட்டறை
மாலை 6.30 மணி: இன்னிசையில் சங்கத் தமிழ் பாடல்கள் - ஜேம்ஸ் வசந்தன் குழுவினர்

ஜூலை 22 (திங்கட்கிழமை)

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - 8, 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டி
நண்பகல் 2 மணி: மாபெரும் கவியரங்கம் - டாக்டர் கவிதாசன்
மாலை 6.30 மணி: பெருங்கதையாடல் - பவா.செல்லத்துரை

ஜூலை 23 (செவ்வாய்க்கிழமை)

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - கோவை நன்னெறிக் கழகம் வழங்கும் பட்டிமன்றம் - முனைவர் கலையமுதன்
மாலை 3.30 மணி: "ஹைகூ கவிதைகள்" 50 ஆண்டுகள் வளர்ச்சியும் சாதனைகளும்
மாலை 6.30 மணி: சொற்பொழிவு

ஜூலை 24 (புதன்கிழமை)

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - கொங்கு நாட்டு கல்வியாளர்கள்
காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - மாணவிகள் கவியரங்கம்
மாலை 3 மணி: பேரூர் தமிழ் மன்றம் வழங்கும் கவியரங்கம்
மாலை 3 மணி: புலம் தமிழ் இலக்கியப் பலகை வழங்கும் கவியரங்கம்
மாலை 6.30 மணி: தியேட்டர் மெரினா வழங்கும் "அந்நியள்" நாடகம்

ஜூலை 25(வியாழக்கிழமை)

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டி
மாலை 4 மணி: சுதந்திர தீபங்கள் நாடகம்
மாலை 6.30 மணி: உடலுக்கும் - உள்ளத்திற்கும் ஏற்ற பயணங்கள் - சிறப்புரை மருத்துவர் சிவராமன்

ஜூலை 26 (வெள்ளிக்கிழமை)

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டி
காலை 11 மணி: சிறுகதை மற்றும் குறும்படப் போட்டிகளுக்கான பரிசு வழங்குதல்
மாலை 6.30 மணி: "கவியரசு கண்ணதாசனின் இன்னிசை பட்டிமண்டபம்" மரபின் மைந்தன் முத்தையா.

ஜூலை 27 (சனிக்கிழமை)

காலை 10 மணி முதல் இரவு 8 மணி: தொழிலகம் தோறும் நூலகம் - தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரை.

ஜூலை 28 (ஞாயிற்றுக்கிழமை)

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு வழங்கும் "பருவ நிலை மாற்றம்" குறித்த கருத்தரங்கம்
காலை 11 மணி: பட்டிமன்றம்
மாலை 4 மணி: பட்டிமன்றம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x