Published : 16 Jul 2024 05:10 AM
Last Updated : 16 Jul 2024 05:10 AM

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கை ஜூலை 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கை ஜூலை 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தி வந்ததாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர்சாதிக்கை கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் போதை பொருட்களை விற்பனை செய்ததன் மூலமாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக்கூறி ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 26-ம் தேதி கைது செய்தனர்.

அமலாக்கத்துறை வழக்கில் ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்த சிறை மாற்று வாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி டெல்லி திஹார் சிறையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜாபர் சாதிக் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரை 15 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் மனு தாக்கல் செய்தார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஜாபர் சாதிக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.

போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கெனவே ஜாமீன் பெற்றுவிட்ட நிலையில் அவரை விடுவிக்கும் முன்பாக அமலாக்கத்துறை திடீரென கைது செய்திருப்பது சட்டவிரோதமானது. எனவே ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தக்கூடாது என வாதிட்டார்.

அதற்கு அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ்,அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் பின்பற்றியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த ஜூன் 26-ம் தேதியே கைது செய்யப்பட்டு விட்டார்

என்பது தொடர்பான ஆவணங்கள் சிறைக்குள்ளேயே அவரிடம் வழங்கப்பட்டு கையொப்பமும் பெறப்பட்டுள்ளது என்றார். அப்போது நீதிபதி எஸ்.அல்லி, அமலாக்கத்துறை எதுவும் துன்புறுத்தியதா என ஜாபர் சாதிக்கிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜாபர் சாதிக், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அமலாக்கத்துறை 3 நாள் தன்னை காவலில் எடுத்து விசாரித்து விட்டதாகவும், 4 முக்கிய நபர்களை இந்த வழக்கில் இணைக்க அமலாக்கத்துறை முயற்சித்து வருவதாகவும், அவர்களின் பெயரைக்கூற வேண்டுமென தன்னை துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதி, வரும் ஜூலை 29 வரை ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் புழல்சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அமலாக்கத்துறை தரப்பில் காவல்கோரிய மனு மீது இன்று (ஜூலை 16) விசாரணை நடைபெறும் என்றும், அப்போது ஜாபர் சாதிக்கைமீண்டும் ஆஜர்படுத்த வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x