Published : 15 Jul 2024 06:07 PM
Last Updated : 15 Jul 2024 06:07 PM

ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் ரூ.4, 620 கோடி அளவுக்கு முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், அந்நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அந்நிறுவனத்தின் இயக்குநரான சவுந்தரராஜன் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “சவுந்தரராஜன் கடந்த 500 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்,” எனக் கோரப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தரப்பில், “மனுதாரரான சவுந்தரராஜனுக்கு உடல்நலனில் பிரச்சினை என்றால் சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம். சவுந்தரராஜனின் மகன் இன்னும் தலைமறைவாக உள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது” என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சவுந்தரராஜனுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பிலும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சவுந்தரராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x