Last Updated : 15 Jul, 2024 03:15 PM

 

Published : 15 Jul 2024 03:15 PM
Last Updated : 15 Jul 2024 03:15 PM

நில மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் மனு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மதுரை: நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கரூரில் போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக மேலக்கரூர் சார் பதிவாளர் அளித்த புகாரின் பேரில் கரூர் நகர போலீஸார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியானது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், வாங்கலை சேர்ந்த பிரகாஷ் என்பவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர் சகோதரர் எம்.ஆர்.சேகர் மற்றும் பிரவீண் உள்ளிட்ட 13 பேர் தன்னை மிரட்டி ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்ததாக கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வாங்கல் போலீஸார் 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடியானது.

இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி எம்ஆர்.சேகர் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘இந்த வழக்குக்கும் எங்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. அரசியல் முன்விரோதம் மற்றும் காழ்ப்புணர்வு காரணமாக எங்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதுமை காரணமாக அறுவை சிகிச்சை செய்வதற்கு உடல் ஒத்துழைக்காத நிலையில் மருத்துவமனையில் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தந்தையுடன் உடனிருக்க வேண்டிய அவசியம் இருப்பதால், முன் ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கூறியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x