Published : 15 Jul 2024 09:15 AM
Last Updated : 15 Jul 2024 09:15 AM

நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

கோப்புப்படம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் (ஜூலை 15, 16) தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 17 முதல் 20-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 14-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 7 செ.மீ. சின்கோனாவில் 6 செ.மீ. வால்பாறை, உபாசி தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 5 செ.மீ. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, விண்ட் வொர்த் எஸ்டேட்,கோவை மாவட்டம் ஆழியார் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூர், பார்வூட், மேல் பவானி, கூடலூர் சந்தை, கோவை மாவட்டம் சோலையாறு, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, தென்காசி மாவட்டம் கடனா அணை, வேலூர் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x