Published : 15 Jul 2024 05:10 AM
Last Updated : 15 Jul 2024 05:10 AM

சென்னையில் ரூ.1.74 கோடியில் புதிதாக 5 மகளிர் உடற்பயிற்சி கூடங்கள்: மாநகராட்சி சார்பில் ஏற்பாடு

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1.74 கோடியில் புதிதாக 5 மகளிர் உடற்பயிற்சி கூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். பணி சுமை மற்றும் பணி சூழல் காரணமாக பெரும்பாலானோர் காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

கட்டுடலை உருவாக்க ஆர்வம் உள்ள ஏழை இளைஞர்களுக்கு, தனியார் உடற்பயிற்சி கூடங்களின் கட்டணங்கள் எட்டாக்கனியாக உள்ளன. இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் 198 உடற்பயிற்சி கூடங்களை உருவாக்கியுள்ளன. அதில் 6 மகளிருக்கான உடற்பயிற்சி கூடங்களாக இயங்கி வருகின்றன.

அண்மை காலமாக பெண்களுக்கான உரிமை மற்றும் முக்கியத்துவம் மேலோங்கிவரும் நிலையில், அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதிலும் 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டு உறுப்பினர்களில் 103 பேர் மகளிராக உள்ளனர்.

ஆரோக்கியத்தில் ஆர்வம்: அவர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் மகளிர் உடற்பயிற்சி கூடங்களை அமைக்கமாநகராட்சி நிர்வாகத்தைதொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனடிப்படையில் மாநகராட்சி சார்பில் மேலும் 5 மகளிர் உடற்பயிற்சி கூடங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: உடல் ஆரோக்கியத்தில் தற்போது மகளிருக்கு அதிக விழிப்புணர்வும், ஆர்வமும் ஏற்பட்டு வருகிறது. அதனால் மகளிர் உடற்பயிற்சி கூடங்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். அதன்படி, திரு.வி.க.நகர் மண்டலம், 68-வது வார்டு ஜவகர் நகரில் ரூ.42.20 லட்சத்திலும், திருவொற்றியூர் மண்டலத்தில், 1-வது வார்டு, எண்ணூர் பறக்கும் சாலை மற்றும் 10-வதுவார்டு பூந்தோட்டம் சாலை ஆகிய 2 இடங்களில் ரூ.61.20 லட்சத்திலும், தண்டையார்பேட்டை மண்டலம், 38-வது வார்டு பட்டேல் நகரில் ரூ.34.25 லட்சத்திலும், கோடம்பாக்கம் மண்டலம், 128-வது வார்டு இளங்கோநகர் சாலையில் ரூ.36.97 லட்சத்திலும், மொத்தம் ரூ.1.74கோடியில் 5 மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் மாநகராட்சியின் மகளிர் உடற்பயிற்சி கூடங்களின் எண்ணிக்கை 11 ஆக உயரும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x