Published : 14 Jul 2024 03:48 PM
Last Updated : 14 Jul 2024 03:48 PM

நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 'தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 16ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17 முதல் 20-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 செமீ, சின்கோனாவில் 6 செமீ, வால்பாறை, உபாசி தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் தலா 5 செமீ, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, விண்ட் வொர்த் எஸ்டேட், கோவை மாவட்டம் ஆழியார் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூர், பார்வூட், மேல் பவானி, கூடலூர் சந்தை, கோவை மாவட்டம் சோலையார், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, தென்காசி மாவட்டம் கடனா அணை, வேலூர் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 18-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.' இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x