Published : 13 Jul 2024 07:03 PM
Last Updated : 13 Jul 2024 07:03 PM

அமலுக்கு வந்தது மதுவிலக்கு திருத்தச் சட்டம்: கள்ளச் சாராய விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள் என்னென்ன?

சென்னை: கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, புதிய தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 அமலாக்கம் செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த மாதம் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து, இனி கள்ளச் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் முதலிய குற்றச் செயல்களை முற்றிலும் ஒழிப்பதற்காகப் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட உத்தரவிட்டிருந்தேன். அதன் ஒரு பகுதியாக, கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், ஏற்கெனவே நடைமுறையிலுள்ள 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரும் வகையில், தமிழக சட்டப் பேரவையில் புதிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படுமென அறிவித்திருந்தேன்.

அதன்படி, தமிழக சட்டப் பேரவையில் 29-6-2024 அன்று, தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச்சட்ட மசோதாவுக்கு ஆளுநரால் 11-7-2024 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு, அது தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத் திருத்தத்தின் விவரங்கள் பின்வருமாறு:

> 1937ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் – 100 லிட்டருக்கு மேல் சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல்; சட்டவிரோதமான மதுபானம் தயாரித்தல்;சட்டவிரோதமான மதுபான ஆலை (Illicit distillery) அல்லது மதுபான நொதி வடிப்பாலையினை (Brewery) கட்டுதல்;
விற்பனைக்கான சட்டவிரோதமான மதுபானங்களை குப்பியில் அடைத்தல் - ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் வரையிலான அபராதம் என தற்போது விதிக்கப்பட்டு வரும் தண்டனை, திருத்தப்பட்ட சட்டத்தின்படி, மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகளுக்குக் குறைவில்லாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

> ஐம்பது லிட்டருக்கு மேல் நூறு லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல் குற்றத்துக்கு அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 2,000 ரூபாய் வரையிலான அபராதம் எனத் தற்போது விதிக்கப்பட்டு வரும் தண்டனை திருத்தப்பட்ட சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

> ஐம்பது லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல்; சட்ட விரோதமான மதுபானம் அருந்துதல் மற்றும் வாங்குதல்; மேற்கண்ட குற்றங்கள் புரிவதற்குப் பணம் செலவழித்தல்; உரிமம் இல்லாத இடங்களில் மது அருந்த அனுமதித்தல் ஆகிய குற்றங்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 1000 ரூபாய் வரையிலான அபராதம் என இதுவரை விதிக்கப்பட்டு வந்த தண்டனை, இனி திருத்தப்பட்ட சட்டத்தில், ஓராண்டுக்கு குறையாத மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

> இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு வகை மதுபானம், வெளிநாட்டு மதுபானம், நொதிபானம் (Fermented Liquor) மற்றும் நொதித்த பழரச மதுவகை (Fermented Fruit Juice Wine) போன்ற அறிவிக்கப்பட்ட மதுபானங்களின் போக்குவரத்து, வைத்திருத்தல் மற்றும் அருந்துதல் தொடர்பான குற்றங்களுக்கு சட்டவிரோதமான மதுபானம் வைத்திருத்தல், அருந்துதல் மற்றும் போக்குவரத்து, ஆகியவற்றுக்குப் பொருந்தக்கூடிய அபராதம் விதிக்கப்பட்டு வந்த தண்டனை, இனி திருத்தப்பட்ட சட்டத்தில், ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது இருபத்தைந்தாயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

> மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு, இதுவரை ஆயுட்காலத்துக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய்க்குக் குறையாத அபராதம் விதிக்கப்பட்டு வந்ததற்குப் பதிலாக, இனி ஆயுட்காலத்துக்குக் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் பத்து லட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும்.

> மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தாத பிற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு, இதுவரை விதிக்கப்பட்டு வந்த பத்து ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ஏழாயிரம் ரூபாய் வரையிலான அபராதம், இனி ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் என விதிக்கப்படும்.

> மனிதர்கள் அருந்துவதற்கு ஏற்றத்தக்க வகையில் இயல்பு மாற்றப்பட்ட சாராவியை (denatured spirit) மாற்றினால் அல்லது மாற்ற முயற்சி செய்தால், அதற்கு இதுவரை மூன்று ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

> மது அருந்துவதற்கு உரிமம் இல்லாத இடங்களைப் பயன்படுத்தும் குற்றத்துக்குப் புதிய பிரிவாக, அந்தக் குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட இடம் வேறு எவரும் பயன்படுத்தாமல் தடுப்பதற்காகப் பூட்டப்பட்டு, சீல் வைக்கப்படும்.

> மதுபானம் தொடர்பான விளம்பரங்களைச் செய்தல் குற்றத்துக்கு, ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டு வந்தது. இனிமேல், திருத்தப்பட்ட சட்டத்தின்படி, இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

> கூட்டுச்சதி குற்றத்துக்கு, பெருங்குற்றங்களுக்காக மூன்று ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் வரையிலான அபராதம் மற்றும் சிறிய குற்றங்களுக்கு மூன்று மாதங்கள் வரையிலான சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் வரையிலான அபராதம் ஆகியவை விதிக்கப்பட்டு வந்தன. இனி, திருத்தப்பட்ட சட்டத்தின்படி, குற்றத்துக்காக பரிந்துரைக்கப்பட்ட அதே தண்டனை மற்றும் சட்டத்தின் வகைமுறைகளைத் தவிர்க்க அல்லது பயனிழக்கச் செய்ய சதி செய்ததற்காக ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் ஐம்பது ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

> இச்சட்டத்தில் வேறு வகையில் வகைசெய்யப்படாத குற்றங்களுக்கு இதுவரை ஆறு மாதங்கள் வரை சிறைதண்டனை அல்லது 500 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் என விதிக்கப்பட்டு வந்த தண்டனை, இனி ஒராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் என விதிக்கப்படும்.

> குற்றச் செயல்களை இணக்கமாகத் தீர்த்துக் கொள்வதற்கான அதிகாரம் 10,000 ரூபாய்க்கு மேற்படாமல் ஆனால், ரூ.1000-க்குக் குறையாமல் பெருங்குற்றங்களைத் தவிர இதர குற்றச்செயல்களை இணக்கமாகத் தீர்த்துக் கொள்வதற்குக் கூட்டுக்கட்டணம் விதிக்கப்பட்டது. புதிய திருத்தச் சட்டத்தின்படி, 25,000 ரூபாய்க்கு மேற்படாமல் ஆனால், ரூ.1000-க்குக் குறையாமல் பெருங்குற்றங்களைத் தவிர இதர குற்றச்செயல்களை இணக்கமாகத் தீர்த்துக் கொள்வதற்குக் கூட்டுக்கட்டணம் விதிக்கப்படும்.

> இது தவிர, மேற்கூறிய குற்றங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். கள்ளச்சாராயம் தொடர்பான மோசமான குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களிடம் இருந்து அவர்களது நன்னடத்தைக்கான பிணையப் பத்திரத்தைப் பெற இச்சட்டத்தின் கீழ் நிர்வாக நடுவருக்கு (Executive Magistrate) அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

> மேற்கூறிய சட்டத்தின் கீழ் மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு, ஏற்கெனவே தண்டிக்கப்பட்ட ஒரு நபர் மீண்டும் தண்டிக்கப்படும் போது, அந்த நபரின் சிறைவாசம் முடிந்த பின்பு, அவரது தற்போதைய வசிப்பிடப் பகுதியிலிருந்து அவர் வெளியேறி வேறொரு மாவட்டத்துக்கு அல்லது வேறொரு பகுதிக்குச் சென்று வசித்திட உத்தரவு பிறப்பிக்குமாறு மதுவிலக்கு அலுவலர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க இத்திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

> மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள், பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞரின் சம்மதமின்றி பிணை வழங்க இயலாத வகையில் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x