Published : 13 Jul 2024 09:56 AM
Last Updated : 13 Jul 2024 09:56 AM
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. இரண்டாம் சுற்றின் முடிவில் திமுக 12,002 வாக்குகளும், பாமக 5,904 வாக்குகளும், நாதக 849 வாக்குகளும் பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 78 வாக்குகள் பதிவாகியுள்ளது. திமுக 6098 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
முன்னதாக முதலில் தபால் வாக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், முதல்வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்துள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.
தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இரண்டாம் சுற்றின் முடிவில் திமுக 12,002 வாக்குகளும், பாமக 5,904 வாக்குகளும், நாதக 849 வாக்குகளும் பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 78 வாக்குகள் பதிவாகியுள்ளது. திமுக 6098 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
20 சுற்றுகளாக..வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 20 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இப்போதே திமுக தொண்டர்கள் உற்சாக மனநிலையுடன் வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகே திரண்டுள்ளனர். காலை 11 மணிக்கு வெற்றிக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தல் ஏன்? விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதனைத் தொடர்ந்து கடந்த 10-ம் தேதி இத்தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற்றது.
‘இந்த இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது; அதனால் நாங்கள் போட்டியிடவில்லை’ என்று அதிமுக ஒதுங்கிய சூழலில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதேர்தலில் 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால் 95,536 ஆண் வாக்காளர்கள், 99,444 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 1,95,495 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 82.48 சதவீத வாக்குப்பதிவாகும்.
வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 572 வாக்குப்பதிவு இயந்திரங்கள் , 276 கட்டுப்பாட்டுக் இயந்திரங்கள், 276 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு, வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டதை வேட்பாளர்களின் முகவர் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment