Published : 13 Jul 2024 06:49 AM
Last Updated : 13 Jul 2024 06:49 AM

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் எக்காலத்திலும் இடமில்லை: நிர்வாகிகள் கூட்டத்தில் இபிஎஸ் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக அரக்கோணம் மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை: அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு எக்காலத்திலும் இடமில்லை என்று பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து, தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 10-ம் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன்படி நேற்று அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மக்களவைத் தொகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்துக்கு பின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறும்போது, கூட்டணி பலமாக அமையாதது மற்றும்பிரதமர் வேட்பாளரை முன்நிறுத்தாது தான் தோல்விக்கான காரணம் என தலைமையிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

இக்கூட்டத்தில், 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என தலைமை எழுப்பிய கேள்விக்கு, பிரச்சினைகளின் அடிப்படையில் அதிமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவுவதால், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் சீமானையும் இணைக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் பழனிசாமி பேசும்போது, கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். நிர்வாகிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும். இளைஞர்களுக்கு அதிக அளவில் பொறுப்புகளை வழங்க வேண்டும். 2026 தேர்தலில் வெற்றி நமக்கு தான் என அறிவுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, தஞ்சாவூர் தொகுதி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சிலர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை கட்சியில் சேர்க்க கூடாது என்றும்சில நிர்வாகிகள் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு பதில் அளித்து பழனிசாமி பேசும்போது சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோருக்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஓபிஎஸ் அணிமாவட்ட செயலாளர் கே.கிருஷ்ணன் மற்றும் மாநில மீனவர் பிரிவு செயலாளர் ஜெ.கோசுமணி ஆகியோர் தலைமையில் 100-க்கும்மேற்பட்டோர், நேற்று பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x