Published : 13 Jul 2024 07:24 AM
Last Updated : 13 Jul 2024 07:24 AM

எஸ்சி- எஸ்டி மக்களின் நலன் காப்பதில் தமிழகம் முன்னணி: ரூ.5,000 கோடி திட்டங்களை செயல்படுத்தியதாக அரசு பெருமிதம்

சென்னை: ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்காக ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான திட்டங்களை செயல்படுத்தி, நாட்டிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில்முன்னணி மாநிலமாகதமிழகம் திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம்தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர் ஆகியோர்வழியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஆதிதிராவிடர்கள் மேம்பாட்டுக்காக சிறப்புமிக்க திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இலவச வீட்டுவசதி திட்டம், தாட்கோமானிய கடன், இலவசக் கல்வி, 18 சதவீதமாக இட ஒதுக்கீட்டை உயர்த்தியது, அருந்ததியினருக்கு 3 சதவீத உள்இடஒதுக்கீடு, பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் எனபல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

அதேபோல் ரூ.1,000 கோடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் குறுகியகாலத்தில் 1,303 தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக மட்டும் ரூ.159.76 கோடி வழங்கப்பட்டது. இதில் 288 மகளிர் ரூ.33.09கோடியை மானியமாக பெற்றுள்ளனர்.

அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்தாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.230 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய "தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கு ஏற்ப, ரூ.85 ஆயிரம் முதல் ரூ.8.25 லட்சம் வரை இருந்த நிவாரணம், குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.12 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிட இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கு 75.27 சதவீதம்அதாவது, ரூ.2,992.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கல்வி பயிலும் ஆதிதிராவிட - பட்டியலின மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஜெஇஇ, நீட், சில்ஏடிநுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்காக ரூ. 300 கோடி மதிப்பில் பல்வேறு இடங்களில் விடுதிக் கட்டிடங்கள், விடுதி பராமரிப்பு பணிகளும் நடைபெறுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x