Last Updated : 12 Jul, 2024 04:52 PM

 

Published : 12 Jul 2024 04:52 PM
Last Updated : 12 Jul 2024 04:52 PM

குழந்தை திருமணத்தை தடுக்க 1098 மற்றும் 181-ல் புகார் அளிக்கலாம்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் குழந்தை திருமணம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குழந்தை திருமணம் தொடர்பாக 1098 மற்றும் 181 ஆகிய எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ''18 வயது நிறைவடையாத பெண்கள், குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடத்துவது குழந்தைகள் திருமண தடைச்சட்டப்படி, பெருங்குற்றமாகும். 18 வயது நிரம்பாத பெண் குழந்தையைத் திருமணம் செய்யும் ஆணுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இக்குற்றம் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும்.

மேலும், 18 வயது நிரம்பாத பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்றால், அந்நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை குழந்தை திருமணங்கள் தொடர்பாக 18 புகார்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண்குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மீது உடன் நடவடிக்கையாக குழந்தையின் விவரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் சமூக நல களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, களப்பணியாளர்கள் சைல்டுலைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவைமையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு, காவல் ஆய்வாளர் ஆகியோர்களால் நேரடியாக குழந்தையின் இல்லத்திற்குச் சென்று விசாரணை செய்யப்படும்.

குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ, திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையினை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்படும். குழந்தை திருமணம் நடைபெற்றிருப்பின் குழந்தையை திருமணம் செய்துகொண்ட மணமகன், மணமகனின் பெற்றோர், குழந்தையின் பெற்றோர் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.

இளவயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பாக புகார் பெறப்பட்டால், காரணமான நபர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும். குழந்தை திருமணம் தொடர்பாக 1098 மற்றும் 181 ஆகிய எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x