Published : 12 Jul 2024 04:29 AM
Last Updated : 12 Jul 2024 04:29 AM

கல்வி நிறுவனங்களின் அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம்: 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களால் கட்டப்படும் கட்டிடங்களுக்கு உரியஅனுமதி பெற்றிருக்க வேண்டும்.இவ்வாறு அனுமதி பெறாத கட்டிடங்களை வரன்முறைப்படுத்தி, அவற்றுக்கு அனுமதி அளிக்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2011-ம் ஆண்டுக்கு முன் திட்டமிடப்படாத பகுதிகள், மலைப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டிடங்கள் வரன்முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.அந்தவகையில், அனுமதியற்றகட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடுமாறு, நகர ஊரமைப்பு இயக்குநர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்று, வீட்டுவசதித் துறைச் செயலர் காகர்லா உஷாஅனுப்பிய கடித்தில் கூறியிருப்பதாவது: நகர ஊரமைப்பு இயக்குநர்கோரிக்கையை ஏற்று, 2011 ஜனவரி1-ம் தேதிக்கு முன் திட்டமிடப்படாத பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அரசு ஆணையிடுகிறது.

மேலும், மலைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் அனுமதியற்ற கட்டிடங்களுக்கு, திட்ட அனுமதி பெற 2020 பிப். 18-ம் தேதி அரசு வெளியிட்ட அனைத்து வழிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x