Last Updated : 10 Jul, 2024 12:02 PM

2  

Published : 10 Jul 2024 12:02 PM
Last Updated : 10 Jul 2024 12:02 PM

‘‘திமுகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்துள்ளனர்’’: பாமக வேட்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்த பாமக வேட்பாளர் சி.அன்புமணி. படம்: எம்.சாம்ராஜ்

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்துள்ளதாக பாமக வேட்பாளர் சி.அன்புமணி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 14-ம் தேதி முதல் துவங்கியது. 24-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 64 மனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தகுதியான மனுக்களில் யாரும் வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்களுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 26-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், 7.10 மணிக்கு அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 42-வது வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது மனைவி வனிதா, தந்தை அரிபுத்திரியுடன் வந்து வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்னியூர் சிவா, “தமிழக முதல்வரின் மக்கள் நலத் திட்டங்களால் இத்தொகுதியில் திமுக மிகப்பெரிய வெற்றிபெறும்” என்றார்.

பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி காலை 9.10 மணிக்கு வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இத்தொகுதியில் உள்ள எங்களுக்குள் கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், வெளியூர்களில் இருந்து இங்கு வந்து திமுக நிர்வாகிகள் வீட்டில் தங்கியுள்ள திமுகவினரால் இங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட விராட்டிகுப்பம் கே.வி.ஆர் நகரில் திமுகவினர் வாக்காளர்களுக்கு தலா ரூ.6000 அளித்துள்ளனர். இதேபோல தொகுதி முழுவதும் ரொக்கப்பணம், பரிசுப் பொருட்களைக் கொடுத்துள்ளனர். வி. சாத்தனூரில் பரிசுப் பொருட்களையும், ஆசாரங்குப்பத்தில் வேட்டி சேலையும் கொடுத்தபோது அதை பாஜகவினரும் பாமகவினரும் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனாலும் தேர்தல் ஆணையம் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் பாமக அமோக வெற்றி பெறும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x