Published : 10 Jul 2024 05:06 AM
Last Updated : 10 Jul 2024 05:06 AM

தொழில் திட்டங்களை அனுமதிக்கும் முன் காலநிலை மாற்றத்தின் தாக்க ஆய்வை நடத்த கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தொழில் வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் முன்பாக காலநிலை மாற்ற தாக்க ஆய்வையும் கட்டாயம் மேற்கொள்ள உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்கஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் கோ.சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு:

இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சித் திட்டங்களை தொடங்க சுற்றுச்சூழல் சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதற்கு அந்தத் திட்டம் சுற்றுச்சூழல் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து அதை அறிக்கையாக அரசுக்கு அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த 2006-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில், காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தவில்லை. ஒருதிட்டத்துக்கு சுற்றுச்சூழலுக்கான தடையில்லா சான்று பெறும் முன்பாக காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்வதையும் கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய தொழில் திட்டங்களுக்கு காலநிலை மாற்றதாக்க ஆய்வையும் மேற்கொள்ள வேண்டுமென சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் சேர்க்கவேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நல்ல காரணத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் இதுதொடர்பாக மத்திய அரசு இரு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x